பைக்கை திருப்பித்தர ரூ.5000 இலஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது; ஸ்கெட்ச் போட்டு தூக்கிய இலஞ்ச ஒழிப்புத்துறை...
சேலத்தில், பறிமுதல் செய்யப்பட்ட பைக்கை விடுவிக்க ரூ.5000 இலஞ்சம் கேட்டுள்ளனர் போலீஸ் ஆய்வாளர் மற்றும் ஏட்டு. பணத்தை பெறும்போது இலஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாக பிடித்தனர்.
சேலம் மாவட்டம், கொளத்தூரை அடுத்துள்ளது சின்னதண்டா கிராமம். இந்தப் பகுதியில் கடந்த 3-ஆம் தேதி தடைச் செய்யப்பட்ட சேவல் சண்டை நடைப்பெற்றது. இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர் கொளத்தூர் ஆய்வாளர் இரவீந்திரன் மற்றும் காவலாளர்கள்.
காவலாளர்களைக் கண்டதும் சேவல் சண்டையில் ஈடுபட்டவர்கள் தெறித்து ஒடினர். சேவல் சண்டையில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க முடியவில்லை என்றாலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 18 மோட்டார் பைக்குகளை காவலாளர்கள் பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் மேட்டூர் அம்மன் நகரைச் சேர்ந்தவர் செந்தில். இவர் மேட்டூர் அனல்மின் நிலையத்தில் தொழிலாளியாக வேலைப் பார்க்கிறார். இவர் சேவல் சண்டையை வேடிக்கைப் பார்க்க சென்றிருந்தாராம். காவலாளர்களை பார்த்ததும் இவரும் தப்பியோடியுள்ளார். இவரது பைக்கையும் காவலாளர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
பின்னர், தனது வண்டியை மீட்க கொளத்தூர் காவல் நிலையம் சென்றுள்ளார் செந்தில். அங்கு ரூ.5000 ஆயிரம் கொடுத்தால் தான் வண்டியை தருவோம் என்றும் இல்லையென்றால் வண்டியை தர முடியாது என்று மிரட்டியுள்ளனர் ஆய்வாளர் இரவீந்திரன் மற்றும் ஏட்டு இளங்கோ.
வண்டியை மீட்க ரூ.5000 ஆயிரம் இலஞ்சம் கேட்கிறார்கள் என்று சேலம் இலஞ்ச ஒழிப்புத் துறை காவலாளர்களிடம் புகார் கொடுத்துள்ளார் செந்தில். பணம் கேட்ட காவலாளர்கள் பிடிக்க இலஞ்ச ஒழிப்புத் துறையினர் செந்திலுக்கு வழிகாட்டினர்.
அதன்படி, இரசாயனம் தடவிய பணத்தை இரவீந்திரன் மற்றும் இளங்கோ பெறும்போது மறைந்திருந்த இலஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். இருவரையும் கைது செய்து அவர்களிடம் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பைக்கை விடுவிக்க ரூ.5000 இலஞ்சம் கேட்டு காவலாளர்கள் வசமாக மாட்டிக் கொண்டனர் என்ற தகவல் இந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.