எந்தவித ஆவணங்களும் இல்லாமல் போலீஸ் ஏட்டு ஓட்டிவந்த கார் மோதி ஒருவர் பலி; நிவாரணம் கேட்டு மக்கள் மனு…
கடலூர்
எந்தவித ஆவணங்களுக்கும் இல்லாமல் போலீஸ் ஏட்டு ஓட்டிவந்த கார் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது மனைவி மற்றும் குழந்தைகளோடு ஆட்சியர் அலுவலகம் வந்த மக்கள் நிவாரணம் கேட்டு மனு அளித்தனர்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு கூட்டம் ஆட்சியர் ராஜேஷ் தலைமையில் நேற்று நடைப்பெற்றது.
இதில் முதியோர் உதவித்தொகை, கடன் உதவி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மக்களிடம் இருந்து சுமார் 340 மனுக்கள் பெறப்பட்டன.
பின்னர், அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி மனுக்களை ஆராய்ந்து, கள ஆய்வு செய்து, விதிமுறைகளுக்கு உட்பட்டும் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதிகுறித்து மனுதாரருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் ஆட்சியர் ராஜேஷ் தெரிவித்தார்.
கடலூர் முதுநகர் அருகே உள்ள காரைக்காடு பெரியபிள்ளையார்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு. இவரது மனைவி இளவரசி. இவர் தனது இரண்டு குழந்தைகள் மற்றும் உறவினர்கள், கிராம மக்களுடன் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார்.
அங்கு ஆட்சியர் ராஜேசை சந்தித்து மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில், “கடந்த 17–ஆம் தேதி புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் ஏட்டு மணிக்கண்ணன் என்பவர் ஓட்டி வந்த கார் மோதி எனது கணவரான கட்டிட மேஸ்திரி ராமு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அவர் ஓட்டி வந்த காருக்கு எந்தவித ஆவணமும் இல்லையாம். கணவரை இழந்த நானும், எனது குழந்தைகளும் ஆதரவற்ற நிலையில் உள்ளோம். எனது பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக் குறியாக உள்ளது.
எனவே, எனக்கு நஷ்டஈடு மற்றும் முதலமைச்சர் நிவாரண நிதி வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.
அவரிடம் இருந்து மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் ராஜேஷ் இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.