police commissioner should give explanation within a week regarding a complaint against actor kamalhasan
ஹிந்துக்களைக் குறித்து அவதூறாகப் பேசியதாக நடிகர் கமல் ஹாசன் மீது குற்றம் சாட்டப்பட்டது. மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால், நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என்பதால், நடிகர் கமல் மீது வழக்குப் பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி, தேவராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இது தொடர்பாக இன்னும் ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று கூறி, சென்னை காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக இந்து தீவிரவாதம் இனியும் இல்லை என்று கூற முடியாது என கமல்ஹாசன் தெரிவித்து கருத்து தொடர்பாக உத்தரப் பிரதேசத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் தமிழ் வார இதழ் ஒன்றில் எழுதி வரும் தொடர் கட்டுரையில், முன்பெல்லாம் இந்து வலதுசாரியினர் மற்ற மதத்தைச் சார்ந்தவர்களுடன் வன்முறையில் ஈடுபடாமல், வாதப் பிரதிவாதங்கள் மூலமே எதிராளியை வன்முறையில் ஈடுபட வைத்தனர். ஆனால், இந்த பழைய சூழ்ச்சி தோற்க ஆரம்பித்ததும், யுக்தியால் முடியாததை சக்தியால் செய்யத் தொடங்கிவிட்டனர் என்று கூறியிருந்தார்.
இந்து வலதுசாரியினரும் வன்முறையில் ஈடுபட ஆரம்பித்துவிட்டதாகவும், எங்கே ஓர் இந்துத் தீவிரவாதியைக் காட்டுங்கள் என்ற சவாலை இனி அவர்கள் விட முடியாது என்றும் கமல்ஹாசன் அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.
அவரது இந்தக் கருத்து தொடர்பாக, அவர் மீது உத்தரப்பிரதேசம் வாராணசியில் உள்ள பனாரஸ் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கறிஞர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்தப் பிரிவுகளின் மூலம் அவதூறு பரப்பியது, மத நம்பிக்கை உடையவர்கள் மனதை புண்படுத்தியது, வார்த்தைகள் மூலம் தீங்குவிளைவிப்பது உள்ளிட்ட குற்றங்கள் கமல்ஹாசன் மீது சுமத்தப்பட்டுள்ளன.
அது போல், தமிழகத்திலும் கமல் மீது நடவடிக்கை கோரி போலீஸாரிடம் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
