கள்ளத் தொடர்பில் இருந்த காவல் உதவி ஆய்வாளர்; பாலியல் தொழில் நடப்பதாக கூறி போலீஸில் மாட்டிவிட்ட மக்கள்...
தூத்துக்குடி
தூத்துக்குடியில் கணவனை இழந்த பெண்ணுடன் கள்ளத் தொடர்பில் இருந்த காவல் உதவி ஆய்வாளரை, அவரது வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக கூறி போலீஸில் புகார் கொடுத்து மக்கள் மாட்டிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், தாளமுத்துநகர் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் நேற்று மதியம் அந்த பகுதி மக்கள் புகார் ஒன்றை கொடுத்தனர்.
அந்த புகாரின்பேரில் காவலாளர்கள் சம்பந்தப்பட்ட வீட்டுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அந்த வீட்டில் ஒரு பெண்ணும், தூத்துக்குடியில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் பணியாற்றும் சிறப்பு உதவி ஆய்வாளரும் இருந்தனர்.
அந்த உதவி ஆய்வாளருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி, குழந்தைகள் இருக்கின்ற நிலையில், அவர் இந்த பெண்ணுடன் இருந்தது சோதனைக்கு சென்ற காவலாளர்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று காவலாளர்கள் தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், "அந்த பெண், கணவனை இழந்து, இரண்டு பெண் குழந்தைகளுடன் அந்த வீட்டில் வசித்து வருகிறார்.
அவருக்கும் இந்த சிறப்பு உதவி ஆய்வாளருக்கும் இடையே சில ஆண்டுகளுக்கு முன்பு கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டுக்கு அவர் வந்து சென்றுள்ளார்.
இதனை அறிந்த அப்பகுதி மக்கள், இருவரின் கள்ளத் தொடர்பை அம்பலப்படுத்தவே காவலாளர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர்" என்பதை கண்டறிந்தனர்.
மேலும் "அந்த பெண்ணின் குடும்பத்தை தற்போது தான் கவனித்து வருகிறேன்" என்று அந்த உதவி ஆய்வாளர் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து இருவருக்கும் காவலாளர்கள் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.