சாராயக் கடைகளில் காசு கேட்டு மிரட்டும் போலீஸ்; மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் டாஸ்மாக் பணியாளர்கள் புகார்...
விழுப்புரம்
விழுப்புரத்தில் உள்ள டாஸ்மாக் சாராயக் கடைகளில் காவலாளர்கள் பணம் கேட்டு மிரட்டுகிறார்கள் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் டாஸ்மாக் பணியாளர்கள் நேரில் புகார் அளித்தனர்.
டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாநிலப் பொருளாளர் ஜெயகணேஷ், மாநிலத் துணைச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்டத் தலைவர் இளங்கோ தலைமையிலான விழுப்புரம் மாவட்ட டாஸ்மாக் பணியாளர்கள் நேற்று பிற்பகல் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்,
அவர்கள் அனைவரும் மாவட்ட கண்காணிப்பாளரைச் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், "விழுப்புரம் மாவட்டத்தில் 210-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் சாராயக் கடைகள் இயங்குகின்றன.
இந்தக் கடைகளின் வசூல் தொகையை இரவு நேரத்தில் பாதுகாப்பாக எடுத்துச் செல்ல உடன் வரும் காவலர்கள் ரூ.200 முதல் ரூ.500 வரை பெற்றும், சிலர் சாராய புட்டிகள் பெற்றும் அடாவடியில் ஈடுபடுகின்றனர். பணம் இல்லை என்று சொன்னால் மிரட்டுகின்றனர்.
குறிப்பாக, உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, திண்டிவனம், விழுப்புரம், செஞ்சி வட்டத்துக்கு உள்பட்ட காவலாளர்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறோம்.
எனவே, இதுபோன்று காவலாளர்கள் பணம் வசூல் செய்வதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு செய்து, காவலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த மனுவில் குறிப்பிட்டு உள்ளனர்.
அதனைப் பெற்றுக்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.