பாமக முழு அடைப்பு போராட்டம்; எட்டு அரசு பேருந்துகளின் கண்ணாடிகள் சுக்குநூறாக உடைப்பு...
சேலம்
சேலத்தில், பாமகவினரின் முழு அடைப்பு போராட்டத்தின்போது இயக்கப்பட்ட எட்டு பேருந்துகளின் கண்ணாடிகள் சுக்குநூறாக உடைக்கப்பட்டன. இது தொடர்பாக இருவரை காவலாளர்கள் கைது செய்தனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை எதிர்த்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் முழுஅடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. அப்போது அரசு பேருந்த்கள் மீது கல்வீசப்பட்டது.
அதன்படி, சேலம் மாவட்டம், எடப்பாடியில் நேற்று அதிகாலை மேட்டூர் சென்ற அரசு பேருந்து, பவானியிலிருந்து எடப்பாடி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து, எடப்பாடியிலிருந்து சேலத்திற்கு சென்ற தனியார் பேருந்து ஆகிய மூன்று பேருந்துகளின் முன்பக்க கண்ணாடிகள் கல்வீசி உடைக்கப்பட்டன.
அதேபோன்று, எடப்பாடி பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துகள் வெளியூர் செல்வதற்கு காலையிலேயே அதிகளவில் நிறுத்தப்பட்டிருந்தன. பின்னர் காவல் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்பட்டன. தனியார் பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை.
இதற்கிடையே பேருந்துகள் மீது கல்வீசி தாக்கியது தொடர்பாக பிரகாஷ் (30), தாண்டவன் (40) ஆகிய இருவரை காவலாளர்கள் கைது செய்தனர்.
அதேபோன்று, ஓமலூர் பயணியர் மாளிகை அருகே தர்மபுரியில் இருந்து சேலத்தை நோக்கி சென்ற தனியார் பேருந்தின் கண்ணாடியை மர்ம நபர்கள் கல்வீசி தாக்கி உடைத்தனர்.