கொரோனாவுக்கான முதல் இரு கட்ட தடுப்பூசிகள் எவ்வாறு இலவசமாக வழங்கப்பட்டனவோ, அதே போல் மூன்றாவது கட்ட தடுப்பூசியும் அனைத்து வகை பிரிவினருக்கும் இலவசமாகத் தான் வழங்கப்பட வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனாவுக்கான முதல் இரு கட்ட தடுப்பூசிகள் எவ்வாறு இலவசமாக வழங்கப்பட்டனவோ, அதே போல் மூன்றாவது கட்ட தடுப்பூசியும் அனைத்து வகை பிரிவினருக்கும் இலவசமாகத் தான் வழங்கப்பட வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து இன்று அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில்,''18 - 60 வயதுப் பிரிவினருக்கு கொரோனா மூன்றாவது (பூஸ்டர்) டோஸ் தடுப்பூசி போடும் பணிகள் நேற்று தொடங்கியுள்ளன. இவை தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே செலுத்தப்படும்; ரூ.375 கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது நியாயமற்றது.
ரூ.375 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும் கூட சில மருத்துவமனைகளில் பழைய கட்டணமான ரூ.1450 வசூலிக்கப்படுகிறது. சில மருத்துவமனைகளில் புதிய கட்டணமாக ரூ.500 வசூலிக்கப்படுகிறது. ஏழைகளால் இவ்வளவு தொகை செலுத்தி பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியாது.
கொரோனா நான்காவது அலை ஜூலையில் தொடங்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பல நாடுகளில் ஓமைக்ரானின் XE திரிபு பரவத் தொடங்கியுள்ளது. அவற்றைத் தடுக்க அனைத்து மக்களுக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்பட வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். கொரோனாவுக்கான முதல் இரு கட்ட தடுப்பூசிகள் எவ்வாறு இலவசமாக வழங்கப்பட்டனவோ, அதே போல் மூன்றாவது கட்ட தடுப்பூசியும் அனைத்து வகை பிரிவினருக்கும் இலவசமாகத் தான் வழங்கப்பட வேண்டும். இதை மத்திய அரசிடம் தமிழக அரசும் வலியுறுத்த வேண்டும்.'' என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக நாடுமுழுவதும் நேற்று 18 வயது மேற்பட்டவர்கள் அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தனியார் மருத்துவமனை தடுப்பூசி மையங்களில் 3-வது தவணையாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது.
இதற்கான நடைமுறைகள் குறித்து, மாநிலங்களின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் ஆகியிருந்தால், மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். ஏற்கெனவே 2 தவணை தடுப்பூசி செலுத்தும் போது கோவின் இணையளத்தில் பதிவு செய்துள்ளதால், பூஸ்டர் தடுப்பூசிக்கு முன்பதிவு செய்யத் தேவையில்லை என்று கூறபட்டது.
மேலும் ஒருவருக்கு முதல் 2 தவணைகளில் போடப்பட்ட அதே தடுப்பூசி மருந்தையே தான் பூஸ்டர் தடுப்பூசியில் பயன்படுத்த வேண்டும் என்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு தனியார் மருத்துவமனை மையங்கள் கோரோனா தடுப்பூசி மருந்தின் விலையோடு கூடுதலாக ரூ.150 வரை சேவைக் கட்டணமாக வசூலிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், சுகாதார மற்றும் முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோர், பூஸ்டர் தடுப்பூசியை, அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவோ அல்லது தனியார் மையங்களில் பணம் செலுத்தி்யோ போட்டுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
