பிளஸ் - 1 தேர்வு எழுதிய அத்தனை மாற்றுத்திறனாளி மாணவர்களும் தேர்ச்சி - முதன்மை கல்வி அதிகாரி நெகிழ்ச்சி...
கரூர்
கரூர் மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் அத்தனை பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர் என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கணேஷ்மூர்த்தி தெரிவித்தார்.
தமிழகத்தில் பிளஸ்-1 தேர்வு முடிவு நேற்று காலை 9.30 மணியளவில் பள்ளிக்கல்வித் துறை இணைய தளங்களில் வெளியிடப்பட்டது.
அதன்படி, கரூர் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேசிய தகவலியல் மையம், பிரம்ம தீர்த்தம் சாலையில் உள்ள மாவட்ட மைய நூலகம் மற்றும் கிளை நூலகங்களில் கட்டணமின்றி மாணவ - மாணவிகள் தங்களது முடிவுகளை ஆர்வமுடன் பார்த்து தெரிந்து கொண்டனர்.
மேலும், அவர்களுக்கு கணினி மூலம் மதிப்பெண் விவரங்கள் நகல் எடுத்து கொடுக்கப்பட்டது. தேர்வு முடிவு வெளியானதையொட்டி மாணவ - மாணவிகள் பலர் தாங்கள் பயின்ற பள்ளிகளுக்கு காலை முதலே வந்து காத்திருந்தனர்.
பின்னர், அறிவிப்பு பலகையில் தேர்வு முடிவு தகவல் ஒட்டப்பட்டதும் அவர்கள் ஓடிச்சென்று பார்த்து தெரிந்து கொண்டனர். சில மாணவ - மாணவிகள் தேர்ச்சி பெற தவறியதை எண்ணி வருத்தமடைந்தனர். அவர்களுக்கு ஆசிரிய - ஆசிரியைகள் ஆறுதல் கூறினர். ஆலோசனைகளையும் வழங்கினர்.
மேலும், பிளஸ்-1 தேர்வு எழுதுவதற்கான உறுதிமொழி படிவத்தில் குறிப்பிடப்பட்டிருந்த செல்போன் எண்ணிற்கு தேர்வு முடிவு குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டதால் பெரும்பாலான மாணவ, மாணவிகள் தங்களது வீட்டில் இருந்தபடியே பெற்றோருடன் மதிப்பெண்ணை தெரிந்து கொண்டனர்.
பிளஸ்-1 தேர்வு முடிவு குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கணேஷ்மூர்த்தி, "கரூர் மாவட்டத்தில், பிளஸ்-1 அரசு பொதுத்தேர்வை 104 பள்ளிகளை சேர்ந்த 5 ஆயிரத்து 354 மாணவர்கள், 5 ஆயிரத்து 795 மாணவிகள் என மொத்தம் 11 ஆயிரத்து 149 பேர் எழுதினர்.
இதில் 4 ஆயிரத்து 999 மாணவர்கள், 5 ஆயிரத்து 671 மாணவிகள் என மொத்தம் 10 ஆயிரத்து 670 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 95.70 ஆகும். மாநில அளவில் கரூர் மாவட்டம் 4-ஆம் இடத்தை பிடித்துள்ளது.
51 அரசு பள்ளிகளில் பயின்ற 5 ஆயிரத்து 102 மாணவ, மாணவிகள் பிளஸ்-1 தேர்வை எழுதியிருந்தனர். இதில் 4 ஆயிரத்து 739 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் தேர்ச்சி சதவீதம் 92.89 ஆகும்.
மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளில் கண்பார்வை குறைபாடு உள்ள ஒருவர் தேர்வு எழுதி வெற்றி பெற்றிருக்கிறார். காதுகேளாதோர், வாய் பேச முடியாதவர்களில் 2 பேர் தேர்வு எழுதி அவர்கள் வெற்றி பெற்றிருக்கின்றனர். இதர வகை மாற்றுத்திறனாளிகளில் 11 பேர் தேர்வு எழுதி அனைவரும் வெற்றி பெற்றுள்ளனர். உடல் அங்கத்தில் குறைபாடுடைய 19 பேர் தேர்வு எழுதியதில் 18 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்" என்று கூறினார்.