உஷார்..!!! மே 30ல் மருந்து கடைகள் ஸ்ட்ரைக் - ஆன்லைன் வர்த்தகத்துக்கு எதிர்ப்பு
ஆன்லைன் மருந்து விற்பனையை கண்டித்து மே 30 ம் தேதி முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என தமிழக மருந்து வணிகர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளது.
ஜிஎஸ்டி மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 30ம் தேதி அனைத்து ஓட்டல்களும் அடைக்கப்படும் என ஏற்கனவே ஓட்டல்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இதை தொடர்ந்து ஆன்லைன் வர்த்தகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மருந்து கடைகள் மூடப்படும் என மருந்து வணிகர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன.
இதுதொடர்பாக மருந்து வணிகர்கள் சங்கத்தினர் கூறியதாவது:-
ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என மருந்து வணிகர்கள் அடிக்கடி கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதற்கிடையில், ஆன்லைன் மூலம் மருந்து விற்பனையை அனுமதிக்க கோரி ஏராளமான கோரிக்கைகள் மத்திய அரசுக்கு வந்தது. இதையடுத்து மத்திய சுகாதார துறை தற்காலிகமாக ஒரு கமிட்டியை அமைத்து ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்வது குறித்து ஆய்வு நடத்தியது.
அந்த கமிட்டி தனது ஆய்வறிக்கையை மத்திய சுகாதார துறையிடம் சமர்ப்பித்தது. அதில், ஆன்லைன் மூலம் மருந்து பொருட்களை விற்பனை செய்வதில் எந்த தவறும் இல்லை என குறிப்பிட்டு இருந்தது.
இதையடுத்து ஆன்லைனில் மருந்து விற்பனையை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து, நாடு முழுவதும் வரும் 30 ம் தேதி மருந்து கடைகளை அடைத்து போராட்டம் நடத்தபோவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நோயாளிகள் கடும் சிரமம் அடைவார்கள்.