Periyar University set three teams to prevent ragging ...

சேலம்

ராகிங்கை (கேலிவதை) தடுக்க மூன்று ராகிங் தடுப்புப் படை குழுக்களை சேலம் பெரியார் பல்கலைக்கழகம் அமைத்து உள்ளது.

சேலத்தை தலைமையிடமாகக் கொண்டு பெரியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இதன் நிர்வாகத்தின் கீழ் தருமபுரி, நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்ட கலை அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. 

கோடை விடுமுறை முடிந்து இன்னும் ஒரு சில வாரங்களில் கலை அறிவியல் கல்லூரிகளில் வகுப்புகள் தொடங்க இருக்கின்றன. மேலும், முதலாமாண்டு மாணவர் சேர்க்கையும் கல்லூரிகளில் நடைபெற்று வருகிறது. 

இதனிடையே, கல்லூரிகளில் ராகிங் நடைபெறாமல் தடுக்கும் வகையில் மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் பொ.குழந்தைவேல் தலைமையில் ராகிங் தடுப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

இக் குழுவில், சேலம் கோகுலம் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் கே.அர்த்தநாரி, சூரமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் பி.கே.செந்தில்குமார், உதவிப் பேராசிரியர் ஏ.லலிதா, ரோட்டரி சங்க நிர்வாகி மருத்துவர் எஸ்.அசோக், 

முனைவர் பட்ட ஆராய்ச்சியாளர் எம்.சங்கீதா, முதுகலைப் பட்ட மேற்படிப்பு மாணவர் கே.திவ்ய பிரபு, பெற்றோர் தரப்பில் டி.அருள்நாதன், வி.செல்வமணி , உதவிப் பதிவாளர் ஏ.சரவணன் ஆகியோர் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

இதேபோன்று, புவியமைப்பியல் துறைப் பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் எஸ்.வெங்கடேஸ்வரன், நூலகவியல் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் முருகன், கணிதவியல் துறை இணைப் பேராசிரியர் பி.பிரகாஷ் ஆகியோர் கொண்ட ராகிங் தடுப்புப் படை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் தி.பெரியசாமி, விலங்கியல் துறைத் தலைவர் பேராசிரியர் எஸ்.கண்ணன், ஆங்கிலத் துறைத் தலைவர் பேராசிரியர் வி.சங்கீதா ஆகியோரை கொண்ட ராகிங் கண்காணிப்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.