பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில் விடுதலை தொடர்பாக முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட வாய்ப்புள்ளது. 

கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஏழு பேரையும் விடுதலை செய்வதென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் இரண்டு ஆண்டுகள் மேலாகியும் தீர்மானத்தின் மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்காததால், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகள், தீர்மானத்தின் மீது ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என எச்சரித்தது மட்டுமல்லாமல், ஒரு முறை காலக்கெடுவும் விதித்தனர். அப்பொழுது ஏழு பேர் விடுதலை தொடர்பான ஆவணங்களை முடிவெடுப்பதற்காக குடியரசு தலைவருக்கு அனுப்பியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இன்று அதுக்குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை. 

இந்த நிலையில் கடந்த 27-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி. ஆர், கவாய் தலைமையிலான அமர்வில் பேரறிவாளன் தொடுத்திருந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், அமைச்சரவையின் ஒவ்வொரு முடிவுக்கு எதிராகவும் மாநில ஆளுநர் செயல்பட்டால் அது கூட்டாட்சி கட்டமைப்புக்கே மிகப்பெரிய பாதகமாகிவிடும் என்று எச்சரித்தனர். அதுமட்டுமல்லாமல், மாநில அமைச்சரவையின் முடிவுகளுக்கு எதிராகச் சொந்த கண்ணோட்டத்தில் செல்ல ஆளுநருக்கு அதிகாரம் இல்லை எனவும் மாநில அமைச்சரவை அனுப்பக்கூடிய பரிந்துரைகளைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநருக்கு என்ன அதிகாரம் உள்ளது?' எனவும் கேள்வியெழுப்பினர்.

மேலும் ஆளுநர் குடியரசுத் தலைவர் அதிகாரம் குறித்த விஷயத்தில் போகாமல் நாங்கள் ஏன் உத்தரவிடக் கூடாது? என்ற நீதிபதிகள், பேரறிவாளனை விடுவிப்பது மட்டுமே இந்த வழக்கை முடித்து வைக்க ஒரே தீர்வு என நினைக்கிறோம் என்றும் கருத்து தெரிவித்து, இந்த வழக்கை மே 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அதன்படி, பேரறிவாளன் விடுதலை தொடர்பாக முக்கிய உத்தரவை உச்ச நீதிமன்றம் இன்று வெளியிட வாய்ப்புள்ளது. இன்று காலை உச்சநிதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் எழுத்துபூர்வ வாதம் தாக்கல் செய்யவுள்ளனர். தொடர்ந்து , மத்திய அரசின் கருத்தை கேட்டபிறகு, முக்கிய அறிவிப்புகளை நீதிபதிகள் வெளியிட வாய்ப்புள்ளது.