பேரறிவாளனுக்கு திடீர் உடல் நலக்குறைவு
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991ம் ஆண்டு படுகொலை செய்யப்ப்பட்டார். இதுதொடர்பாக பேரறிவாளன், முருகன், நளினி உள்பட சிலரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில், பேரறிவாளன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பேரறிவாளனுக்கு திடீரென சிறுநீரக தொற்றுநோய், மூட்டுவலி ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் கடும் அவதியடைந்து வருகிறார். இதற்காக அவருக்கு, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை செய்து, சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் பேரறிவாளனுக்கு நேற்று மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க, சிறை அதிகாரிகள் அழைத்து சென்றனர். வேலூர் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன், அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு பேரறிவாளனுக்கு ரத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை செய்யப்ப்பட்டது. மேலும், மூட்டு வலி அதிகளவில் உள்ளதால், எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் எடுக்கப்பட்டு, டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். பின்னர் அவருக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை கொடுத்து அனுப்பி வைத்தனர்.
இதை தாடார்ந்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் வேலூர் மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர்.