பேரறிவாளனை பரோலில் விடுவிக்க பரிசீலனை …முதலமைச்சரின் அறிவிப்புக்கு வைகோ வரவேற்பு…
பேரறிவாளனை பரோலில் விடுவிப்பது குறித்த அரசின் பரிசீலனையில் உள்ளது என்ற முதலமைச்சரின் அறிவிப்புக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வரவேற்பு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று, காவல்துறை மற்றும் தீயணைப்பு, மீட்புப்பணித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, பேசிய திமுக உறுப்பினர் ஜெ.அன்பழகன், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என கேள்வி எழுப்பினார்.
மேலும் பேரறிவாளனை பரோலில் விடுவிக்கும் திட்டம் உள்ளதா எனவும் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்துப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, , 10 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் உள்ள கைதிகளை விடுவிப்பதுகுறித்து தலைமை வழக்கறிஞரின் ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் பேரறிவாளனை பரோலில் விடுவிப்பதுகுறித்து அரசின் பரிசீலனையில் உள்ளது என்றும் தெரிவித்தார்.
ஏற்கனவே பேரறிவாளன் உட்பட 4 பேரை பரோலில் விடுதலை செய்ய வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியிருந்த நிலையில், தற்போது பேரறிவாளனின் பரோல் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.