கள்ளை, பெப்சி, கோக் போன்ற மென்பானங்களுக்கு போட்டியாக உள்நாட்டிலும், உலக அளவிலும் சந்தைப்படுத்துவதன் மூலமாக நாட்டுக்கு அன்னியச் செலாவணி அதிகமாகக் கிடைக்கும் என கள் இயக்கக் கள ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி தெரிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதுகுறித்து, அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

“உலக அளவில், 108 நாடுகளில் பனை, தென்னை மரங்கள் அதிகம் உள்ளன. எந்த நாட்டிலும் கள் இறக்கவும், பருகவும் தடை இல்லை. தமிழகத்தில் மட்டும் கடந்த 30 ஆண்டுகளாகத் தடை தொடர்கிறது.

இது, தமிழக மக்களின் உணவு தேடும் உரிமையைப் பறிப்பதாகும். அயல்நாட்டு சாராயத்தை விற்கும்போது கள்ளை விற்பது தவறா? கள்ளில் கொடிய போதைப் பொருள் உள்ளதா? என நிரூபித்தால் அவருக்கு ரூ. 10 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை யாரும் நிரூபிக்கவில்லை.

புளிக்காத கள்ளை விஞ்ஞான முறையில் இறக்கி, ஒய் 23 ஈஸ்ட் கொண்டு புளிக்க வைத்து தயாரிக்கப்படும் கள், மல்லிகை மணம் கொண்டிருக்கும். இந்தக் கள்ளை, பெப்சி, கோக் போன்ற மென்பானங்களுக்கு போட்டியாக உள்நாட்டிலும், உலக அளவிலும் சந்தைப்படுத்த முடியும். இதன் மூலமாக, நாட்டுக்கு அன்னியச் செலாவணி அதிகமாகக் கிடைக்கும்.

இதை உணர்ந்து இளைஞர்கள், கள் இயக்கத்துக்கும், கள் இறக்க வேண்டும் என்ற எண்ணத்துக்கும், கள் மூலமாக உற்பத்தியாகும் பொருள்களுக்கும் உள்ள நம்பகத் தன்மையை அறிகின்றனர்.

எனவே, இளைஞர்கள் மூலமாகக் கள் இயக்கம் களம் காணும் நாள் தூரத்தில் இல்லை என்பதை உணர முடிகிறது. அதிக அளவில் இளைஞர்கள் இதை ஆதரிக்கும்போது, இயற்கை பானமான கள், புளிக்காத கள் மக்களுக்கு கிடைக்கும்” என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.