சாராயக் கடையை அகற்ற வலியுறுத்தி நான்காவது நாளாக போராடும் மக்கள்; பேச்சுவார்த்தைக்கு கூட வராமல் அலட்சியம் காட்டும் அதிகாரிகள்...
விருதுநகர்
விருதுநகரில் குடியிருப்பு பகுதியில் உள்ள அரசு சாராயக் கடையை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி அப்பகுதி மக்கள் நான்காவது நாளாக கிராம மக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள வெங்கடாசலபுரம் ஊராட்சியில் உள்ள நியாய விலைக் கடை அருகே அரசு சாராயக் கடை ஒன்று புதிதாக திறக்கப்பட்டுள்ளது.
இந்த சாராயக் கடையை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி இப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
அதற்கு அதிகாரிகள் செவிசாய்க்காத நிலையில், சாராயக் கடையை அகற்றியே ஆகணும் என்று வலியுறுத்தி மக்கள் சாத்தூர் வட்டாட்சியரிடமும், கோட்டாட்சியரிடரிமும் பலமுறை மனு அளித்தனர். ஆனால், அப்போதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த இப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான ஆண்களும், பெண்களும் அரசு சாராயக் கடை முன்பு பந்தல் அமைத்து கடந்த நான்கு நாள்களாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கும் அதிகாரிகள் மனதிறங்காமல் பேச்சுவார்த்தை கூட வராமல் மக்களின் போராட்டத்தை தூசென அலட்சியப்படுத்து கின்றனர்.
இதனால் புதன்கிழமை சாத்தூர் வட்டாட்சியரிடமும், நேற்று மாவட்ட ஆட்சியரிடமும் மாதர் சங்கம் மற்றும் மக்கள் சார்பில் சாராயக் கடையை அகற்ற கோரி மனு அளித்து போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
அதிகாரிகள் நேரில் வந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சாராயக் கடையை அகற்றும் வரை இந்த காத்திருப்பு போராட்டம் தொடரும் என்று மக்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டனர்.