கொரோனா பாதிப்பு இன்னும் குறையல.. மாஸ்க் அணிவது கட்டாயம்.. சுகாதாரத்துறை செயலர் பரபரப்பு சுற்றறிக்கை..
மாஸ்க் அணிவது குறித்து மக்களிடையே தவறான புரிதல் உள்ளதாக கூறிய சுகாதாரத்துறை செயலர், பொதுஇடத்தில் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் டிசம்பர் இறுதியில் கொரோனா மூன்றாம் அலை தொடங்கியது. ஒமைக்ரான் பாதிப்பு வேகமாக பரவிய நிலையில், தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்தது. இதனால் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டன. ஜனவரி மாதத்தில் உச்சமடைந்த கொரோனா பாதிப்பு, ஒரு நாள் சுமார் 30,000 வரை பாதிக்கப்பட்டனர்.ஆனால் இரண்டாம் அலையை ஒப்பிடும் போது மூன்றாம் அலையில் உயிரிழப்பு மற்றும் பாதிப்பு வீரியம் குறைவாக இருந்தது. நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி பலனாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களும் வீட்டு தனிமையிலே விரைவில் குணமாகினர். இருப்பினும் தமிழகத்தில் முழு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
பின்னர் பிப்ரவரி மாத தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல குறைய தொடங்கியது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா உயிரிழப்பு பூஜ்ஜீயமாக பதிவானது. மேலும் தினசரி கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத அளவில் மிக குறைவாக பதிவாகி வருகிறது. அதன் படி, கடந்த 24 மணி நேரத்தில் 30 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனிடையே கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு குறித்து சுகாதாரத்துறை அமைச்சர், செயலர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர், தமிழகத்தில் அமலில் இருந்த அனைத்து வகையான கொரோனா கட்டுப்பாடுகளையும் தளர்த்தி அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, கொரோனா காலத்தில், பொது சுகாதார சட்டத்தின்படி அரசு விதித்திருந்த பல்வேறு கட்டுப்பாடுகள் திரும்ப பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அதே சமயம் அரசின் நிலையான வழிகாட்டுதல்களான தனி மனித இடைவெளி, முகக்கவசம் அணிதல் உள்ளிட்டவற்றை சுய விருப்பத்தின் அடிப்படையில் பொது மக்கள் பின்பற்றலாம் என தெரிவிக்கப்பட்டது. இதனிடையே சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளார்.
அதில், “தமிழ்நாட்டில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு 20 பேர் என இருந்து வரும் நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக இந்த எண்ணிக்கை உயர தொடங்கி உள்ளது.கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டம் என்ற இலக்கை எட்டுவதற்கு பதிலாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருப்பூர், சேலம் உள்ளிட்ட ஓரிரு மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.
முககவசம் அணிவது, கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற நடைமுறைகள் தற்போது வரை தொடர்கிறது. கொரோனா பாதிப்பு தற்போது வரை இருந்து வருவதால் மேற்கண்ட நடைமுறையை பொதுமக்கள் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்பன போன்றவற்றை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.