Asianet News TamilAsianet News Tamil

சிஏஏ பிளவுமிகு சட்டம்... மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியுள்ள மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜகவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் கூறியுள்ளார்.

People of India will never forgive BJP for unleashing divisive Citizenship Amendment Act: MK Stalin sgb
Author
First Published Mar 11, 2024, 8:42 PM IST

பிளவுமிகு சட்டமான குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியுள்ள பாஜக அரசுக்கும் அந்தச் சட்டத்தை நிறைவேற்ற ஆதரவு தெரிவித்த அதிமுகவுக்கும் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு நாடு முழுவதும் அமல்படுத்தி இருக்கிறது. இந்தச் சட்டத்தின் விதிகளை வெளியிட்டு, மத்திய அரசு அதிகாரபூர்வ அறிவிப்பை அரசிதழிலும் வெளியிட்டுள்ளது.

இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், கூறியிருப்பதாவது:

கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது!

"குடியுரிமை என்ற மனிதநேயக் கொள்கையை மதம் - இனத்தால் வேறுபடுத்தும் பிளவுவாதக் கொள்கையாக மாற்றியது ஒன்றிய பா.ஜ.க. அரசு. இசுலாமிய மதத்தவரையும், இலங்கைத் தமிழரையும் வஞ்சிக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை இயற்றியது ஒன்றிய பா.ஜ.க அரசு. அதனை திமுக உள்ளிட்ட ஜனநாயகச் சக்திகள் கடுமையாக நாடாளுமன்றத்தில் எதிர்த்தன. ஆனால் பா.ஜ.க.வின் பாதம் தாங்கியான அ.தி.மு.க. ஆதரித்து வாக்களித்ததால்தான் அச்சட்டம் நிறைவேறியது.

மக்கள் எதிர்ப்பு காரணமாக அந்தச் சட்டத்தை இதுநாள் வரையில் அமல்படுத்தாமல் வைத்திருந்தது பா.ஜ.க. திராவிட முன்னேற்றக் கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் 8-ஆம் நாள், இந்திய நாட்டின் ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் போற்றிப் பாதுகாக்கவும், அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மதச்சார்பின்மைக் கோட்பாட்டினை நிலைநிறுத்தவும், இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டம் - 2019-ஐ, இரத்து செய்திட ஒன்றிய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரசினர் தனித் தீர்மானத்தை நிறைவேற்றினோம்.

இப்போது, தேர்தலில் தனது அனைத்து அஸ்திரங்களும் எடுபடாமல் போன நிலையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலமாகக் கரையேற முயற்சிக்கிறார் பிரதமர் மோடி. தேர்தல் நேரத்தில் மக்களின் உணர்ச்சிகளைச் சீண்டி அரசியல் ஆதாயம் அடையப் பார்க்கிறார் பிரதமர். அமைதிமிகு இந்தியாவில் பிளவுமிகு சட்டத்தைக் கொண்டு வந்த பா.ஜ.க.வையும், அந்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அடிமை அ.தி.மு.க.வையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்! தக்க பாடம் புகட்டுவார்கள்!"

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

CAA Explained: குடியுரிமை திருத்தச் சட்டம் யாருக்கு பயன்படும்? சாதக பாதங்கள் என்னென்ன?

Follow Us:
Download App:
  • android
  • ios