செங்குன்றம்,

இராட்சத ஆழ்துளை கிணறுகள் அமைத்து நிலத்தடி நீரை திருடுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரி மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாதவரம் பால்பண்ணையை அடுத்த மாத்தூர், மஞ்சம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சில நபர்கள் இராட்சத ஆழ்துளை கிணறுகள் அமைத்து நிலத்தடி நீரை திருடுகின்றனர். அவற்றை டேங்கர் லாரிகள் மூலம் எடுத்துச் சென்று சென்னையில் உள்ள ஓட்டல்கள், வணிக வளாகங்களில் விநியோகம் செய்து வருகின்றனர்.

இதனால் அப்பகுதிகளில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதுபோன்று, நிலத்தடி நீர் திருட்டை தடுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கின்றனர்.

இந்த நிலையில் நிலத்தடி நீர் திருட்டை தடுக்கக்கோரி மாத்தூர், மஞ்சம்பாக்கம் குடியிருப்பு சங்கத்தை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் மாத்தூர் கிராம நிர்வாக அலுவலகம் அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தகுந்த நடவடிக்கை எடுக்கும் வரை தங்களது போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.