திண்டுக்கல்,

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

திண்டுக்கல் அருகே, 20 நாள்களாக குடிநீர் விநியோகம் இல்லாத்தால், பாதிக்கப்பட்ட மக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

திண்டுக்கல் அருகே உள்ள தோட்டனூத்துர் பஞ்சாயத்தில் ரெண்டலப்பாறை கிராமம் உள்ளது. அங்குள்ள மக்களுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் மற்றும் ஆழ்குழாய் கிணறுகள் மூலம் வாரத்துக்கு 2 அல்லது 3 முறை குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

ஆனால், கடந்த சில மாதங்களாக குடிநீர் விநியோகத்தில் குளறுபடி நீடிக்கிறது என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கடந்த 20 நாட்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என அவர்கள் புகார் தெரிவித்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலையில் ரெட்டியப்பட்டியில் திண்டுக்கல் – நத்தம் சாலையில் ரெண்டலப்பாறையை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் திரண்டனர். திடீரென அவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகளும், காவலாளர்களும் மறியல் நடக்கும் இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும்படி மக்கள் வலியுறுத்தினர்.

இதை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள், சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

இந்த போராட்டம் காரணமாக சாலையின் இருபுறமும் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.