சீரான குடிநீர் விநியோகம் கேட்டு வெற்றுக் குடங்களுடன் மக்கள் சாலை மறியல்; கடும் போக்குவரத்து பாதிப்பு...
அரியலூர்
அரியலூரில் சீரான குடிநீர் விநியோகம் கேட்டு வெற்றுக் குடங்களுடன் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம், எருத்துகாரன்பட்டி ஊராட்சியில் உள்ள அண்ணாநகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்தப் பகுதியில் கடந்த சில நாட்களாகவே ஊராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீர் சீராக விநியோகம் செய்யப்படுவதில்லை.இதனால் அப்பகுதி மக்கள் நீண்ட தூரம் சென்று குடிநீர் எடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுநாள்வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் பொறுமையிழந்த அப்பகுதி மக்கள் சீராக குடிநீர் விநியோகம் செய்யக்கோரி வெற்றுக் குடங்களுடன் அரியலூர் - கோவிந்தபுரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த அரியலூர் காவலாளர்கள் மற்றும் தாசில்தார் முத்துலட்சுமி, வட்டார வளர்ச்சி துறை அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அந்த பேச்சுவார்த்தையில், "இன்னும் 15 நாட்களில் சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து மக்கள் மறியலை கைவிட்டனர்.
இந்த மறியல் போராட்டத்தால் அரியலூர் - கோவிந்தபுரம் சாலையில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.