குடிக்க தண்ணீர் விடலனா புடிச்சிதான் வைப்போம்... - மாவட்ட ஆட்சியர் ரோகினியை ஓடவிட்ட பொதுமக்கள்...!
சேலம் டெங்கு குறித்து ஆய்வு செய்ய வந்த மாவட்ட ஆட்சியர் ரோகினியை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் அவர் காரில் ஏறி புகார்களை வாங்காமல் சென்றுவிட்டார்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கடுமையாக இருந்து வருகிறது. டெங்குவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதோடு மட்டுமல்லாமல், உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
இந்நிலையில், டெங்குவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வீடுகள், கடைகள், அரசு - தனியார் அலுவலகங்களில் ஆய்வு செய்து வருகிறது.
அந்த வகையில் கொசுப்புழுக்களை ஏற்படுத்தும் வகையில் உள்ள வீடுகள், கடைகள், உள்ளிட்டவைகளுக்கு அபராதமும் விதித்து வருகிறது.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் டெங்கு ஒழிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று டெங்கு கொசு குறித்து ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி, டெங்கு கொசு ஒழிப்பு குறித்து ஆய்வில் ஈடுப்ட்டு வருகிறார். அதேபோல் இன்றும் சேலம் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு தண்ணீரை பாத்திரத்தில் பிடித்து வைத்திருப்பதை பார்த்து கண்டித்தார்.
இதனால் அப்பகுதி மக்கள் பெரும் கண்டனத்தை தெரிவித்தனர். குடிநீர் முறையாக விநியோகிக்கப்படாததால் பிடித்து தான் வைக்க முடியும் எனவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.
மேலும் மாவட்ட ஆட்சியர் ரோகினியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த ஆட்சியர் காரில் ஏறி புகார் மனுக்களை வாங்காமல் சென்று விட்டார்.