விபத்தில் சதம் போட்ட பாம்பன் பால சாலை… கேக் வெட்டி கொண்டாடிய பொதுமக்கள்..!
பாம்பன் பால சாலையி்ல் அதிகமான வழுவழுப்புத் தன்மை காரணமாக அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. பாம்பன் சாலையை செப்பனிட மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தும் வகையில் 100வது விபத்தை கேக் வெட்டி கொண்டாடி பொதுமக்கள் நூதன முறையில் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
தனித்தீவாக இருந்த ராமேஸ்வரத்தை தமிழகத்துடன் இணைக்கிறது 2.5 கி.மீ தொலைவிலான பாம்பன் பாலம், கடந்த 1988-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கப்பட்டது.
அந்த பாலம் அடிக்கடி சேதமடைந்ததால், ரப்பர் சாலை அமைக்கப்பட்டது. ரப்பர் சாலை அமைக்கப்பட்டதால் வழுவழுப்புத் தன்மை அதிகமாக இருந்தது. இதனால் சாலைக்கும் வாகனங்களுக்கும் இடையேயான உராய்வுத் தன்மை குறைவால் சரியான பிடிமானம் கிடைக்காமல் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன.
அந்த சாலையில் 30 கி.மீ வேகத்திற்கு அதிகமாக செல்லக்கூடாது. ஆனால் ராமேஸ்வரம் சுற்றுலாத்தளம் என்பதால் பாம்பன் பால சாலையில் வேகமாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகின்றன. தொடர்ச்சியாக விபத்துகள் நடந்தாலும் சாலையை செப்பனிட மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
பாம்பன் சாலையில் வேகமாக சென்ற வாகனம் ஒன்று இன்று விபத்துக்குள்ளானது. ரப்பர் சாலை அமைக்கப்பட்ட பிறகு நடக்கும் 100வது விபத்து இது.
இதையடுத்து பாம்பன் சாலையை சரிப்படுத்த வலியுறுத்தும் வகையில் 100வது விபத்தை கேக் வெட்டி கொண்டாடி நூதன முறையில் அப்பகுதி மக்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
விபத்தில் சதம் அடிக்கப்பட்ட பிறகாவது பாம்பன் சாலை செப்பனிடப்படுமா என பொதுமக்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.