உண்டியல் பணத்தை திருடியவரை கையும் களவுமாக பிடித்த மக்கள்; வெளுவெளு என வெளுத்து போலீஸில் ஒப்படைப்பு...
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் நள்ளிரவில் கோயிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்து பணத்தை திருடியவரை கையும் களவுமாக பிடித்த மக்கள் வெளுவெளு என வெளுத்து வாங்கினர்.
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ள குரும்பப்பட்டியில் காயாம்பு ஐயனார் கோயில் ஒன்று உள்ளது.
சனிக்கிழமை நள்ளிரவு இந்தக் கோயிலின் உள்ளே மர்ம நபர் ஒருவர் எகிறி குதித்து உள்ளே நுழைந்தார். அவர், உண்டியலை உடைத்து அதனுள்ளே இருந்த பணத்தை திருடிக் கொண்டு கோயில் சுற்றுச்சுவரில் ஏறி குதிக்க தப்பிக்க முயன்றார்.
அப்போது உண்டியல் உடைக்கும் சத்தம் கேட்டு திரண்டு வந்த அக்கம்பக்கத்தினர் அந்த திருடனை கையும் களவுமாக பிடிக்க முயன்றனர். மக்களை பார்த்ததும் தப்பியோடிய அவரை விரட்டிப் பிடித்தனர்.
பின்னர் அவரை வெளுவெளு என வெளுத்த மக்கள் இதுகுறித்த தகவலை இலுப்பூர் காவல் நிலையத்திற்கு அளித்தனர்.
அந்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த காவலாளர்கள் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அன்னவாசல் ஜே.ஜே. நகரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் சண்முகராஜ் (24) என்பவர்தான் கோயில் உண்டியலை உடைத்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும், ரூ.1000 பணத்தை அவரிடம் இருந்து காவலாளர்கள் பறிமுதல் செய்தனர். அந்த புகாரின்பேரில் அவன் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.