People besieged by the inspection regime Emphasizing the water shortage ...

திருவண்ணாமலை

தண்ணீரில் டெங்கு கொசுப் புழுக்கள் உள்ளதா? என்று ஆய்வு நடத்த வந்த ஆட்சியரை முற்றுகையிட்டு தண்ணீர் பற்றாக்குறையைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் முறையிட்டனர்.


திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலத்தை அடுத்த சின்னஓலைப்பாடி கிராமத்தில் டெங்கு நோய் தடுப்பு பணிகள் நடைபெற்றது.

இந்தப் பணிகளை ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அவர், வீடு வீடாகச் சென்று தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டுள்ள தொட்டி, பாத்திரங்களில் கொசு புழுக்கள் உள்ளதா? சுகாதார நடவடிக்கைகள் மக்களுக்கு பயனளிக்கிறதா? என்பது குறித்து ஆய்வு செய்தார்.

அந்த ஆய்வின்போது ஆட்சியரை முற்றுகையிட்ட மக்கள், “தண்ணீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பழுதடைந்த சிறிய குடிநீர் தொட்டியை சரி செய்து தரவேண்டும்.

கால்வாய்களை சுத்தம் செய்து மருந்து தெளிக்க வேண்டும்.

தெருக்களில் உள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைத்து தர வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முறையிட்டனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் உறுதியளித்த பிறகே மக்கள் சமாதானம் அடைந்தனர்.

மக்கள் சூழ வசமாக சிக்கிய ஆட்சியரை முற்றுகையிட்டு மக்கள் முறையிட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.