50 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சியில் மக்களின் அடிப்படை தேவைகள் எதுவும் பூர்த்தி செய்யப்படவில்லை -ஜி.கே.வாசன்...
திருப்பூர்
50 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆட்சியில் குடிநீர், சாக்கடை, சாலை வசதி உள்ளிட்ட மக்களின் அடிப்படை தேவைகள் எதுவும் முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை என்று திருப்பூரில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
தமிழ் மாநில காங்கிரசு கட்சி தலைவர் ஜி.கே.வாசன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று திருப்பூருக்கு வந்தார்.
அதன்படி, காலேஜ் ரோட்டில் நடைபெற்ற த.மா.கா. நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சிக்கு சென்று மணமக்களை ஜி.கே.வாசன் வாழ்த்தினார்.
பின்னர் அவர் 13-வது டிவிஷனுக்குட்பட்ட காலேஜ் ரோடு, 4-வது டிவிஷனுக்குட்பட்ட வெங்கமேடு மற்றும் 16-வது வார்டுக்குட்பட்ட பாண்டியன்நகர் ஆகிய பகுதிகளில் கட்சி கொடியேற்றி வைத்து கல்வெட்டுகளையும் திறந்து வைத்தார்.
பின்னர், காந்திநகரில் உள்ள த.மா.கா. தலைமை அலுவலகமான மூப்பனார் பவனில் கட்சியில் புதிய நிர்வாகிகள் இணையும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு திருப்பூர் மாநகர் மாவட்ட தலைவர் ரவிக்குமார் தலைமை வகித்தார். மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா, மாநில பொது செயலாளர் மோகன் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்தஸ்நிகழ்ச்சியில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு புதிதாக கட்சியில் இணைந்த மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்டோருக்கு உறுப்பினர் அட்டையை வழங்கி பேசினார்.
அப்போது அவர், "கட்சியில் புதிதாக இணைந்தவர்களை மனதார வரவேற்கிறோம். இனிவரும் காலத்தில் மக்களுக்காக உண்மையாக, நேர்மையாக பணியாற்றும் ஆட்சியாளர்களை தமிழக மக்கள் தேர்வு செய்ய வேண்டும்.
கடந்த 50 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆட்சியில் குடிநீர், சாக்கடை, சாலை வசதி உள்ளிட்ட மக்களின் அடிப்படை தேவைகள் எதுவும் முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை.
தமிழகம் முழுவதும் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் த.மா.கா. நிர்வாகிகள் போராட வேண்டும்“ என்று கூறினார்.
இதில் மாநில செயற்குழு உறுப்பினர் முத்துராமலிங்கம், மாநில செயலாளர் சேதுபதி உள்பட மாவட்ட, மண்டல, டிவிஷன் மற்றும் சார்பு அமைப்பு நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.