வேலூரில் பின்னிருக்கையில் ஹெல்மெட் போடாமல் பயணித்தால் அபராதம்.. இன்றுமுதல் அமல் ..
வேலூரில் இன்றுமுதல் பின்னிருக்கையில் அமர்ந்து வருபவர்களுக்கும் ஹெல்மேட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் ஹெல்மேட் அணியாமல் வந்தால் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் வேலூர் எஸ்.பி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஹெல்மேட் அணியாமல் ஏற்படும் சாலை விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே இதனால் சாலை விபத்துகளை குறைக்கவும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. விபத்துகளில் காயமடைந்தவர்களுக்கு உடனே மருத்துவ சிகிச்சை கிடைத்திடும் வகையில் இன்னுயிர் காப்போம் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ஆபாசமான அசைவு, வசனங்கள் இருக்க கூடாது.. ஆடல்,பாடல் நிகழ்ச்சிகளுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி !
போக்குவரத்து விதிமீறல், மது குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுதல், ஹெல்மெட், சீல் பெல்ட் அணியாமல் இருப்பது, அதி வேகம் உள்ளிட்டவைகளே விபத்துகள் ஏற்பட காரணமாக உள்ளது. எனவே போக்குவரத்து விதிகளை அனைவரும் கடைபிடிக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் என பல்வேறு நடவடிக்கைகளை காவல்துறையினர் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் தான் சென்னை பெருநகரில் பகுப்பாய்வு செய்ததில் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் 15ம் தேதி வரையிலான கால பகுதியில் மட்டும் இரு சக்கர வாகன விபத்துகளில் 98 பேர் உயிரிழந்துள்ளனர் 841 பேர் காயம் அடைந்துள்ளனர். இதில் ஹெல்மெட் அணியாமல் பயணித்ததில் 80 பேர் வாகன ஓட்டிகளும் மற்றும் 18 பின்னிருக்கை பயணிகள் உயிரிழந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றது.
எனவே, விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மே 23ம் தேதி முதல் சென்னையில் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னிருக்கை அமர்ந்து வரும் நபரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிந்து வர வேண்டும் என்னும் நடைமுறை அமலுக்கு கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் வேலூரில் இன்று முதல் பைக் ஓட்டுபவர் மற்றும் பின்னால் இருப்பவர் ஆகிய 2 பேரும் கட்டாயம் தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அப்படி போடாவிட்டால் இனி அபராதம் வசூலிக்கப்படும் என்று எஸ்பி ராஜேஷ் கண்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: அனுமதி இல்லாததால் ஆழ்கடலில் நிற்கும் சொகுசு கப்பல்.. திருப்பி அனுப்பியது புதுச்சேரி அரசு..