pallaru sand stolen auto driver got Fined Rs.27 thousand
வேலூர்
வேலூரில் கோழிக்கூண்டுகளை அடுக்கி வைத்து பாலாற்று மணலை கடத்திய சரக்கு ஆட்டோ ஓட்டுநருக்கு ரூ.27 ஆயிரம் அபராதம் விதித்தனர் வருவாய்த்துறை அதிகாரிகள்.
வேலூரில் உள்ள பாலாற்றில் தற்போது தண்ணீர் இல்லை. இதனால் மணல் மேடுகளாக காட்சி அளிக்கிறது. இந்த மணலை பலர் லாரி, வேன்களில் கொள்ளையடித்து கடத்தி விற்று வருகின்றனர்.
இதுபோன்ற மணல் கடத்தலை தடுக்க மாவட்ட ஆட்சியர் ராமன் உத்தரவின்பேரில் வருவாய்த்துறையினர் ஒரு பிரிவாகவும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் உத்தரவின்பேரில் காவல்துறையினர் மற்றொரு பிரிவாகவும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இருப்பினும், மணல் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் பல்வேறு புதிய யுக்திகளை கையாண்டு மணல் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, வேலூர் தாசில்தார் பாலாஜி, மண்டல துணை தாசில்தார் விநாயகமூர்த்தி, சத்துவாச்சாரி வருவாய் ஆய்வாளர் சுரேஷ், கிராம நிர்வாக அலுவலர் கனகராஜ் மற்றும் அதிகாரிகள் நேற்று முன்தினம் நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
வேலூர் அருகே அன்பூண்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக கோழிக் கூண்டுகளை ஏற்றிய சரக்கு ஆட்டோ ஒன்று வந்தது. இதனைப் பார்த்த அதிகாரிகள் ஆட்டோவை கைக்காட்டி நிறுத்தினர்.
பின்னர், ஆட்டோவை நிறுத்திய ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி ஆட்டோவையும் சோதனை செய்தனர்.
அப்போது பாலாற்று மணலை எடுத்து ஆட்டோவில் பரப்பி அதன்மேலே கோழிக் கூண்டுகளை அடுக்கி வைத்து கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக ஆட்டோவின் உரிமையாளரான பள்ளிகொண்டாவை சேர்ந்த ஜாகீர் என்பவருக்கு ரூ.27500 அபராதம் விதிக்கப்பட்டது.
