20 குழந்தைகளின் மரணத்திற்கு காரணமாக அமைந்த கோல்ட்ரிப் இருமல் மருந்தை தயாரித்த நிறுவனத்தின் உரிமையாளர் எஸ்.ரங்கநாதன் இன்று அதிகாலை சென்னையில் கைது செய்யப்பட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே ஸ்ரீசன் பார்மா என்ற மருந்து உற்பத்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து 'கோட்ரிப்' என்ற குழந்தைகளுக்கு வழங்கக்கூடிய இருமல் மருந்து தயார் செய்யப்பட்டு நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் விநியோகிக்கப்பட்டு வந்தது. அந்த வகையில் மத்திய பிரதேசம் மாநிலத்திலும் இந்த மருந்து விநியோகம் செய்யப்பட்டு குழந்தைகளுக்கு வழங்க பரிந்துரைக்கப்பட்டது.

இந்நிலையில் கோடல்ட்ரிப் மருந்தை உட்கொண்டு 20 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த சில நாட்களில் அடுத்தடுத்து உயிரிழந்த குழந்தைகளின் மரணத்திற்கு அவர்கள் உட்கொண்ட இருமல் மருந்து தான் காரணம் என்பதை உறுதிப்படுத்திய அதிகாரிகள் ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தின் உரிமையாளர் எஸ்.ரங்கநாதன் மீது வழக்குப்பதிவு செய்து அவரைத் தேடி வந்தனர்.

இதனிடையே சென்னை அசோக்நகர் வீட்டில் தங்கியிருந்த ரங்கநாதனை சென்னை காவல் துறையினரின் உதவியுடன் மத்திய பிரதேச காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.