other companies is there in tamilnadu not only sterlite

மக்களின் பெரும் போராட்டத்திற்கு பின், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது.ஆனால் தமிழகத்தில் உள்ள தூத்துக்குடியில் மட்டும் தான் இந்த பிரச்சனையா..இதே போன்று வேறு நச்சு ஆலைகள் எங்கெல்லாம் இருக்கிறது தெரியுமா என திமுக செய்தித்தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.

அதில்,

ஸ்டெர்லைட் ஆலை மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. வேதாந்தா குழுமம் என்ன நீதிமன்றத்திற்கு சென்று என்ன தீர்ப்பு வாங்கப் போகிறதோ? அது ஒரு புறம்.

1. கூடங்குளம் ஆலையும், அதன் அணுக்கழிவுகள்.

2. தாமிரபரணி தண்ணீரை சுரண்டும் கேரளா பிளாச்சிமேடாவில் இருந்து விரட்டப்பட்டு திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டானில் கோகோ கோலா இருப்பு கொண்டுவிட்டது.

3. திருச்செந்தூர் அருகேயுள்ள ஆறுமுகநேரியில் பல ஆண்டுகளாக செயல்படும் தாரக தாரா கெமிக்கல்ஸ் ஆலையினால் புற்று நோய் ஏற்படுவதாக அவ்வட்டார மக்கள் சொல்கின்றனர்.

4. நாட்டின் பொருளாதாரத்தை சுரண்டும் தென் மாவட்ட கடற்கரையோர தாது மணல் கொள்ளை.

5. கொங்கு மண்டலத்தில் கெயில் குழாய் பதிப்பதை போல திருவள்ளூரிலிருந்து மதுரை வரை மற்றும் கடலூரிலிருந்து சேலம் வரை அமைக்கும் மத்திய அரசின் திட்டங்கள்.

6. திருவண்ணாமலை மாவட்டத்தில் வேடியப்பன், கவுந்திமலை ஆகியவற்றில் இரும்புத் தாது வெட்டி எடுக்க தனியார் ஜிண்டால் நிறுவனத்திற்கு ஒப்புதல். இதனால் நச்சுக் காற்று பரவும்.

7. நாமக்கல் அருகே பிளாட்டினம் உருக்கும் போது நச்சு வாயுக்கள் வெளியேறக்கூடிய திட்டத்திற்கு ஒப்புதல்.

8. சிவகாசி, ஆலங்குளம், அரியலூர் தமிழ்நாடு சிமெண்ட்ஸ் ஆலையினால் ஏற்படும் சுற்றுச் சூழல் பாதிப்புகள்.

9. நொய்யலாற்றில் சாயப்பட்டறைக் கழிவுகள்.

10. தோல் கழிவுகள் நதிகளில் கலப்பது.

11. கொடைக்கானல் பாதரசக் கழிவுகள்.

12. மீத்தேன், ஹைட்ரோ கார்பன், டெல்டாவில் இருந்து தெற்கே ராமநாதபுரம், திருச்செந்தூர் சாத்தான்குளம் வரை விவசாய நிலங்களை காவுக் கொடுக்கும் திட்டங்கள்.

13. கேரளா குப்பைகளை தமிழக எல்லையில் கொட்டுவது .

இப்படி ஒரு நீண்ட பட்டியலில் உள்ள நச்சுகக்கும்ஆலைகளை,செயல்களை

தடை செய்வது எப்போது? ஆனால், தமிழ்நாட்டில் நீண்டகாலமாக போராடிப் பெற்ற சேலம் இரும்பாலையும், ஊட்டி இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலையையும், மணவாளக்குறிச்சி தாது மணல் ஆலை போன்ற பல ஆலைகளை முடக்கக்கூடிய நிலைக்கு மத்திய அரசின் முடிவுகள் உள்ளன.

தமிழகத்திற்கு எய்ம்ஸ், ஐஐம், மேலும் ஒரு ஐஐடி, மத்திய பல்கலைக்கழகங்கள் ஆகியன வராது, செம்மொழி நிறுவனமும் முடக்கப்பட்டுவிட்டது. நச்சுக்கழிவுகளை மட்டும் தமிழகம் ஒரு குப்பைக் கூடை போல பாவித்து மத்திய அரசு கேடான திட்டங்களை தமிழகத்தை நோக்கி தள்ளுகிறது".

இவ்வாறு கே.எஸ்.இராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.