OPS speech in dinigul about sasikala family

சசிகலா குடும்பத்தின் அகோர பசிக்கு அதிமுக பலியாகிவிடக்கூடாது…திண்டுக்கல்லை அதிர வைத்த ஓபிஎஸ்…

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியும், கட்சியும் இன்று சசிகலா குடும்பத்தின் கையில் சிக்கியுள்ளது என்றும், அந்த குடும்பத்தின் அகோர பசிக்கு அதிமுக பலியாகிவிடக் கூடாது என்று ஓபிஎஸ் தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் நூற்றாண்டு விழா மற்றும் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம், திண்டுக்கல்லில் நடைபெற்றது.

 முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்றுப் பேசினார். அப்போது, எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் மக்களுக்காக ஆட்சி நடத்தினார்கள். ஆனால், இன்று ஆட்சியும், கட்சியும் சசிகலா குடும்பத்தின் கையில் சிக்கும் நிலை உருவாகியுள்ளது. அந்த குடும்பத்தின் அகோர பசிக்கு அதிமுக பலியாகிவிடாமல் தடுக்க வேண்டும் என குறிப்பிட்டார்.

ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் மர்ம முடிச்சுகளை அவிழ்க்க வேண்டும். அதற்காக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று சாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம். ஆனால், நீதிவிசாரணை நடத்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மறுக்கிறது. கட்சியையும், ஆட்சியையும் ஒரு குடும்பத்தின் பிடியில் இருந்து விடுவிக்க முன்வரவில்லை. ஏதேதோ நாடகங்களை நடத்தி மக்களை ஏமாற்ற பார்க்கிறார்கள் என தெரிவித்தார்.

எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மாவட்ட செயலாளர்கள் அவர்களிடம் இருந்தாலும், தொண்டர்களும், மக்களும் எங்களிடம் இருக்கிறார்கள். என்று கூறிய ஓபிஎஸ், நாங்கள் கூறிய 2 கோரிக்கைகளையும் நிறைவேற்றாதது ஜெயலலிதாவுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம் என்றார்.

மக்கள் பிரச்சினைகளை எப்படி தீர்க்க வேண்டும் என்று ஜெயலலிதா எங்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளார். ஆனால், தமிழகத்தில் தற்போது நடைபெறும் அரசு, ஜெயலலிதாவின் கொள்கைகளை நிறைவேற்றும் அரசாக இல்லை. தமிழகத்தில் தற்போது மக்கள் விரோத ஆட்சி நடக்கிறது என்றும் ஓபிஎஸ் அதிரடியாக தெரிவித்தார்.