opp to wine shop
குடியிருப்பு பகுதிகளில் மதுக்கடைகளை திறக்க முற்பட்டால் பொது மக்களே தன்னெழுச்சியாக திரண்டு வந்து தடுத்து நிறுத்துவார்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாமக தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பையடுத்து தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளிலும், அதையொட்டி 500 மீட்டர் தொலைவிலும் அமைந்திருந்த மதுக்கடைகள் மூடப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
ஆனால், மூடப்பட்ட மதுக்கடைகளை குடியிருப்புப் பகுதிகளில் திறக்கும் முயற்சியில் தமிழக அரசு மீண்டும் ஈடுபட்டுள்ளதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அனைத்து குற்றங்களுக்கும், சீரழிவுகளுக்கும் மதுதான் மூலகாரணமாக இருப்பதால் மதுவை முழுமையாக ஒழித்து தமிழகத்தை மதுவில்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்றும் ராமதாஸ் தெரிவித்தார்.
சாலையோரங்களில் மதுக்கடைகள் இருப்பதால் சாலை விபத்துக்களும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன என்பதால் தான் பாமக சார்பில் இந்த வழக்கு தொடரப்பட்டு வெற்றி பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இப்போது மூடப்பட்ட 3321 மதுக்கடைகளையும் புதிதாக திறக்க வேண்டுமெனில், மக்களுக்கு சொந்தமான கட்டிடங்களை வாடகைக்கு எடுத்து தான் நடத்த முடியும்.
இத்தகைய மதுக்கடைகளுக்கு வாடகைக்கு இடம் தர மறுப்பதன் மூலம் புதிய மதுக்கடைகள் திறப்பதை எளிதில் தடுக்க முடியும் என்றும் ராமதாஸ் யோசனை தெரிவித்துள்ளார்.
குடியிருப்புப் பகுதிகளில் மதுக்கடைகளை அமைக்கக் கூடாது என்று உயர்நீதிமன்றம் பலமுறை தீர்ப்பளித்திருக்கிறது.
அதையும் மீறி மக்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளில் மதுக்கடைகளை அமைக்க அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை மக்கள் தன்னெழுச்சியாக திரண்டு தடுக்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்
