கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவலைத் தடுக்க ஆபரேஷன் சைரஸ் தொடங்கியது; நான்கு நாள்கள் நடைபெறுமாம்...
கன்னியாகுமரி
கன்னியாகுமரி கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவலைத் தடுக்க கடலோரப் பாதுகாப்புக் குழுமத்தின் சார்பில் கடல் பகுதியில் நான்கு நாள்கள் நடைபெறும் ஆபரேஷன் சைரஸ் பாதுகாப்பு சோதனை தொடங்கியது.
இந்தியா முழுவதும் கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவதை கண்காணித்துத் தடுக்க கடலோரப் பாதுகாப்புக் குழுமத்தின் சார்பில் நவீன படகில் காவலாளர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக சஜாக், சைரஸ் உள்ளிட்ட ஆபரேஷன்கள் அடிக்கடி நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கடலோரப் பாதுகாப்புக் குழும டி.எஸ்.பி. ஸ்டான்லி ஜோன்ஸ் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்து உள்ளார்.
அந்த உத்தரவின்பேரில், கன்னியாகுமரி மாவட்ட கடலோரப் பாதுகாப்புக் குழும ஆய்வாளர் சைலஸ் தலைமையில், இரண்டு அதிநவீன படகுகளில் சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகம் பகுதியில் இருந்து, முட்டம் வரையிலும், சின்னமுட்டத்திலிருந்து கூடங்குளம் வரையிலும் ரோந்துப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நான்கு நாள்கள் நடைபெறும் இந்த ஆபரேஷன் சைரஸ் பாதுகாப்பு சோதனை நேற்றுத் தொடங்கியது.
மேலும், கடலோரப் பாதுகாப்புக் குழுமம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியில் தீவிர வாகனச் சோதனையும் நடைபெற்று வருகிறது.