தமிழகத்தில் வறட்சிப் பாதிப்பில் 200 விவசாயிகள் வரை உயிரிழந்து நிலையில் 17 பேர் மட்டுமே இறந்ததாக நிவாரணம் அறிவித்திருப்பது சரியானதல்ல. அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியதாவது: 

“சாதி, மத, அரசியல் பேதமின்றி இளைஞர்கள் நடத்திய போராட்டத்தால் மத்திய அரசின் ஒப்புதலுடன், தமிழக அரசு சல்லிக்கட்டுக்கான சட்ட திருத்தத்தைக் கொண்டு வந்தது.

இதை விளக்கிக் கூறாமல், அமைதியாக நடந்த போராட்டத்தின் 7-ஆவது நாள் அதிகாலையிலேயே காவலாளர்கள் தாக்குதலைத் தொடங்கினர். தமிழகத்தில் ஒரே நேரத்தில், திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மத்திய அரசின் தூண்டுதலே காரணம்.

காவலாளர்களோ ஆட்டோ, வீடுகளுக்கு தீ வைத்தனர். கோவையில் தோழர் என்ற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது எனக் கூறி காவலாளர்கள் தாக்கினர். இதற்குக் காரணமான காவல் துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவல் துறையினரின் தாக்குதல் நடவடிக்கையை முதல்வர் நியாயப்படுத்தாமல், நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். கைதானவர்களை விடுவிக்க வேண்டும்.

தமிழகத்தில் வறட்சிப் பாதிப்பில் 200 விவசாயிகள் வரை உயிரிழந்துள்ளனர். டெல்டா மாவட்டங்களில் அதிகம் பேர் இறந்துள்ளனர். ஆனால், 17 பேர் மட்டுமே இறந்ததாக நிவாரணம் அறிவித்திருப்பது சரியானதல்ல. இறந்த விவசாயிகள் அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.

தமிழகத்தில் நீட்தேர்வு வந்தால் மாணவர்கள் பாதிக்கப்படுவர். இதற்கு விதிவிலக்குப் பெற இப்போதைய சட்டப்பேரவைக் கூட்டத்திலேயே சட்டம் கொண்டு வர வேண்டும்.

மேலும், லோக் ஆயுக்தா எனப்படும் ஊழல் தடுப்புச் சட்டத்தையும் கொண்டு வர வேண்டும்.

உள்ளாட்சித் தேர்தல் தேதியை விரைவில் அரசு அறிவிக்க வேண்டும்.

காந்தி உள்ளிட்டத் தலைவர்களின் போராட்டக் களமாக விளங்கிய மெரீனாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை திரும்பப் பெற வேண்டும்” என்றுத் தெரிவித்தார்.