ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேற கோரி உண்ணாவிரத போராட்டம் - கதிராமங்கலம் கிராமத்தில் பரபரப்பு
கதிரா மங்கல கிராமத்தில் இருந்து ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேற வேண்டும் என வலியுறுத்தி, 5 பேர் திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஆழ்துளை கிணறு அமைத்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது.
கடந்த மாதம் 30ம் தேதி எண்ணெய் குழாய் உடைந்து கசிவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து, பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தி மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்பட 10 பேரை கைது செய்தனர்.
இதை கண்டித்தும், ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேறக்கோரியும் கதிராமங்கலம் அய்யனார் கோவில் தோப்பில் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஓஎன்ஜிசி நிறுவனம், கதிரா மங்கலம் கிராமத்தில் இருந்து வெளியேற வேண்டும் என வலியுறுத்தி இன்று காலை முதல் 5 பேர் திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கைது செய்யப்பட்ட ஜெயராமன் உள்பட 10 பேரை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
கதிரா மங்கலம் கிராமத்தில், தொடர்ந்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருவதால், அங்கு பெரும் பரபரப்பும், பதற்றமும் நிலவி வருகிறது.