திருமணமான ஒரே மாதத்தில் கணவன், கள்ளக் காதலியுடன் ஓட்டம்; சோகத்தில் மனைவி தீக்குளித்து தற்கொலை...
திருவள்ளூர்
திருவள்ளூரில், திருமணமான ஒரே மாதத்தில் கணவன் கள்ளக் காதலியுடன் ஊரைவிட்டு ஓடிப் போனதால் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு தாலுகா இரங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சம்பத் (57). இவர் அதே கிராமத்தில் அஞ்சலக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வேல்விழி (45).
இந்த தம்பதியின் மகள் அர்ச்சனாதேவி (21). இவருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் வேலூர் மாவட்டம், நெமிலி தாலுகா புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜ் (29) என்பவருக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைப்பெற்றது.
திருமணத்திற்கு பிறகு தங்கராஜிக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருடன் கள்ள உறவு இருப்பது தெரியவந்ததால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில், தங்கராஜ் ஒரு மாதத்திற்கு முன் தனது கள்ளக் காதலியுடன் ஓடிவிட்டதால் மனவேதனை அடைந்த அர்ச்சனாதேவி இரங்காபுரத்தில் உள்ள தனது தாயார் வீட்டில் வசித்து வந்தார்.
கணவன் தனக்கு செய்த துரோகத்தை எண்ணி எண்ணி அவர் தினமும் சோகத்தில் மூழ்கினார். அடைந்தார். நேற்று வீட்டில் தனியாக இருந்த அர்ச்சனாதேவி குளியலறையில் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.
அவரின் அலறல் சத்தத்தைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்தனர். உடல் கருகிய அவரை சிகிச்சைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அர்ச்சனாதேவியின் தந்தை சம்பத் ஆர்.கே.பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதுகுறித்து ஆய்வாளர் அண்ணாதுரை வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.
கணவன், கள்ள காதலியுடன் ஊரை விட்டு ஒடிபோனதால் திருமணமான ஒரு மாதத்தில் தனது வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்று பெண் தீக்குளித்த சம்பவம் இந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.