Asianet News TamilAsianet News Tamil

ஐயப்ப பூசையில் கார் நுழைந்து ஒருவர் பலி; ஏழு பேர் படுகாயம்…

one killed-in-car-entering-iyappan-mass-seven-injured
Author
First Published Jan 13, 2017, 10:30 AM IST

பல்லடம்,

திருப்ப்பூரில், ஐயப்ப பூசைக்காக நின்று கொண்டிருந்த அடியார்கள் கூட்டத்தில் வேகமாக கார் நுழைந்ததில் ஒரு பெண் பலியானர். மேலும் ஏழு பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பனப்பாளையம் அரிசன காலனியைச் சேர்ந்த பண்ணாரியின் மகள் சிவரஞ்சினி (22). இவருடைய உறவினர்கள் உள்பட இந்த பகுதியைச் சேர்ந்த சிலர் சபரிமலைக்கு செல்ல மாலை அணிந்திருந்தனர். அவர்கள் சபரிமலைக்கு செல்வதற்காக பல்லடம் – திருப்பூர் சாலையில் உள்ள பிளேக் மாரியம்மன் கோவிலில் ஐயப்ப பூசையுடன் இருமுடி கட்டும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இந்தப் பூசையில் சிவரஞ்சினி உள்பட சுமார் 50–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இரவு 10.30 மணி அளவில் திருப்பூரில் இருந்து பல்லடம் நோக்கி வந்த கார் ஒன்று பனப்பாளையம் பிளேக் மாரியம்மன் கோவில் அருகே உள்ள திருப்பதில் வந்த போது, கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அப்போது, ஐயப்ப பூசைக்காக நின்று கொண்டிருந்த பக்தர்கள் கூட்டத்திற்கு அந்த கார் வேகமாக புகுந்தது.

இதில் கூட்டத்தில் நின்றுக் கொண்டிருந்த சிவரஞ்சினி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த உத்தமராஜன் (48), ராஜா (35), ரங்கன் (50), சத்யா (22), துர்காதேவி (22), லலிதா (25), லலிதாவின் மகள் வாணிஸ்ரீ (7) ஆகியோர் எட்டு பேரும் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்தைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிவரஞ்சினி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

மற்ற ஏழு பேரும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கும், திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து பல்லடம் காவலாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று விசாரணை நடத்தியதில், காரை ஓட்டிவந்த நபர் யார்? என்று கண்டுப்பிடிக்க முடியவில்லை.

காரை ஓட்டிவந்தவரும் இந்த விபத்தில் காயம் அடைந்ததால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பூசையின் போது நடந்த இந்த விபத்தால் அந்த பகுதி மக்கள் பதற்றத்துடன் இருக்கின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios