அமர்பிரசாத் ரெட்டி உள்பட 4 பேரை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு கட்சியின் கொடிக் கம்பம் நிறுவப்பட்டது. அனுமதியின்றி கொடிக் கம்பம் வைக்கப்பட்டதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து அதனை அகற்ற சென்ற காவல் துறையினருக்கும், மாநகராட்சி ஊழியர்களுக்கும் பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கொடிக் கம்பத்தை அகற்றுவதற்காக கொண்டு வரப்பட்ட ஜேசிபி வாகனமும் சேதப்படுத்தப்பட்டது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த விவகாரம் தொடர்பாக, பாஜக திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில தலைவராகவும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்படுபவருமான உள்ள அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேரை கானாத்தூர் போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 4 பேரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை ஆலந்தூர் நீதிமன்றத்தில் போலீஸார் அனுமதி கோரினர். வழக்கை விசாரிக்க மாஜிஸ்திரேட் சந்திர பிரபா, அமர்பிரசாத் ரெட்டி உள்பட 4 பேரை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

முன்னதாக, அமர் பிரசாத் ரெட்டியை மேலும் இரண்டு வழக்குகளில் போலீஸார் கைது செய்தனர். செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவின்போது வைக்கப்பட்டிருந்த விளம்பரத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்தின் மீது பிரதமர் மோடியின் படத்தை ஒட்டிய புகாரிலும், வள்ளுவர் கோட்டம் முன்பு பாஜக நடத்திய போராட்டத்தின்போது போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளரிடம் தகராறு செய்ததாக பதியப்பட்ட வழக்கிலும் அவரை போலீசார் கைது செய்தனர்.

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு நவ.6க்கு தள்ளி வைப்பு!

இதில், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளரிடம் தகராறு செய்த வழக்கில் அமர் பிரசாத் ரெட்டியை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. செஸ் ஒலிம்பியாட் விளம்பரப்படம் தொடர்பான வழக்கில் தேவைப்படும்போது ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் அமர் பிரசாத் ரெட்டிக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இதனிடையே, அமர் பிரசாத் ரெட்டியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க காவல்துறையினர் முயற்சிப்பதாக கூறி, அதற்கு தடை விதிக்கக் கோரி, அவரது மனைவி நிரோஷா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.