கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகள் 3 பேர், ஆசிரியைகள் 2 பேரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி ஒரு நாள் மட்டும் காவலில் எடுத்து விசாரிக்க விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாளை மதியம் 12 மணிக்கும் 5 பேரையும் மீண்டும் ஆஜர்படுத்த சிபிசிஐடிக்கு நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டுள்ளார். 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள சக்தி பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீமதி எனும் மாணவி கடந்த 13 ஆம் தேதி, பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்டதாக பள்ளிநிர்வாகம் தெரிவித்தது. ஆனால் மாணவியின் பெற்றோர் மரணத்தில் சந்தேக இருப்பதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவரது தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் சந்தேக மரணமாக மாற்றி, சின்னசேலம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதனிடையே கடந்த 17 ஆம் தேதி பள்ளி நிர்வாகத்தை கண்டித்து, பள்ளியை முற்றுக்கையிட்டு நடத்திய போராட்டம் வன்முறையாக வெடித்தது. 20 க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்களுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டன. மாணவர்களின் அசல் சான்றிதழ், மேஜை, நாற்காலி உள்ளிட்டவற்றை தீ வைத்து கொளுத்தினர். மேலும் காவல்துறையினர் வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. கலவரக்காரர்களை தடுத்த போலீசார் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது

மேலும் படிக்க:பரபரப்பு.. போராட்டத்தில் மயங்கிய எடப்பாடி பழனிசாமி.. மேடையில் நின்றுக்கொண்டிருந்த போது திடீர் மயக்கம்..

கள்ளக்குறிச்சி வன்முறை தமிழகத்தின் சட்ட ஒழுங்கை கேள்விக்குறியாக்கியுள்ளது. இந்நிலையில் வன்முறை நடந்த அன்றே மாணவியின் மரணம் வழக்கு தொடர்பாக பள்ளி முதல்வர், தாளாளர், செயலாளர், இரு ஆசிரியைகள் என ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் மாணவி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. பின்னர் இந்த வழக்கு தற்கொலைக்கு தூண்டியதாக மாற்றப்பட்டது. இதனிடையே கைது செய்யப்பட்ட 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி , விழுப்புரம் நீதிமன்றத்தில் நேற்று மனுதாக்கல் செய்தனர்.

இந்த மனு இன்று விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் முன்பு விசாரணைக்கு வந்தது. பள்ளி முதல்வர் உட்பட 5 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின் சிபிசிஐடியின் மனுவை விசாரித்த நீதிபதி, 5 பேருக்கும் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். பள்ளி முதல்வர் சிவசங்கரன், பள்ளி தாளாளர் ரவிக்குமார், பள்ளி செயலாளர் சாந்தி, வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியர் கீர்த்திகா ஆகியோரை ஒரு நாள் காவிலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் படிக்க:கள்ளிக்குறிச்சி கலவரம்.. தீ வைத்து கொளுத்தப்பட்ட போலீஸ் வாகனம்..19 வயது நபர் கைது..