தமிழகம் , பாண்டியில் இடை தேர்தல் அறிவிப்புக்கு பின்னர் வாகன சோதனையில் முதல் போணியாக ஆம்னி பஸ்சில் ரூ.1 கோடி சிக்கியது இதையடுத்து சென்னையில் உள்ள பிரபல துணிக்கடைகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரியிலிருந்து சென்னை நோக்கி ஆம்னி பேருந்து ஒன்று வந்தது. இந்த பேருந்தில் சட்டவிரோதமாக பணம் கொண்டுவரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் கிளியனூர் செக் போஸ்ட் அருகே ஆம்னி பேருந்தை மடக்கினர். அப்போது ஆய்வு நடத்தியதில் பேருந்தில் வந்த 4 ஆசாமிகளிடம் ரூ. 1 கோடி பணம் இருந்தது. இது பற்றி கேட்டபோது அவர்கள் பதிலளிக்க முடியாமல் திணறினர். இதையடுத்து அவர்களை காவல் நிலையம் கொண்டு வந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் அந்த பணத்தை பற்றிய தகவலை வருமான வரித்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து பாண்டிச்சேரியில் உள்ள பிரபல துணிக்கடையில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இது தவிர சென்னை தி.நகர் , மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பிரபலமான கடைகளில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர். இடைதேர்தல் ஆரம்பித்த தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் பணம் கடத்தலை தடுக்க தேர்தல் ஆணையம் முழு வீச்சில் இறங்கியுள்ளது.
பணம் எந்த வகையில் வந்தாலும் அதை கண்டுபிடித்து தடுக்க முனைப்புடன் உள்ளனர். விரைவில் தேர்தல் அறிவிக்கப்பட்ட 3 தொகுதிகளிலும் இரண்டிரண்டு பார்வையாளர்கள் வர உள்ளதாக தேர்தல் அதிகாரி ராஜெஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
