On the 20th day of the jallikattu Registration from Today

நாமக்கல்

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நாமக்கல்ல் மாவட்டம், பொட்டிரெட்டிப்பட்டியில் வரும் 20-ஆம் தேதி சல்லிக்கட்டுப் போட்டி நடைபெறும் என்றும் அதற்கான மாடுகள் மற்றும் மாடுபிடி வீரர்களின் பதிவு இன்று முதல் தொடங்குகிறது என்றும் சல்லிக்கட்டு போட்டி ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் செல்வராஜ் தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டத்தில், அலங்காநத்தம், பொட்டிரெட்டிப்பட்டி மற்றும் போடிநாயக்கன்பட்டி பகுதிகளில் சல்லிக்கட்டு போட்டி கடந்தாண்டு நடந்தது.

இந்தாண்டில் பொட்டிரெட்டிப்பட்டி பகுதியில் வரும் 20-ஆம் தேதியும், அலங்காநத்தம் பகுதியில் 27-ஆம் தேதியும் சல்லிக்கட்டு போட்டி நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து பொட்டிரெட்டிப்பட்டி சல்லிக்கட்டு போட்டி ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் செல்வராஜ், "பொட்டிரெட்டிப்பட்டி கிராமத்தில் வரும் 20-ஆம் தேதி சல்லிக்கட்டுப் போட்டி நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

இதனையொட்டி, போட்டிக்கான ஏற்பாடுகளைத் தொடங்கி உள்ளோம். அதன் முதற்கட்டமாக தடுப்பு கட்டைகள் கட்டும் பணியை முடித்து விட்டோம்.

இன்று முதல் மாடுகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் பதிவைத் தொடங்க உள்ளோம். மாட்டின் உரிமையாளர்கள் கோமாரி நோய்த் தடுப்பூசி அட்டை மற்றும் கால்நடை மருத்துவர்கள் சான்றிதழுடன் வரவேண்டும். சல்லிக்கட்டுப் போட்டிக்கான ஆயத்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன" என்று அவர் தெரிவித்தார்.

இதேபோல போடிநாயக்கன்பட்டி பகுதியில் பிப்ரவரி 3-ஆம் தேதியும், கரியபெருமாள் புதூர் பகுதியில் 10-ஆம் தேதியும் சல்லிக்கட்டுப் போட்டி நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது" என்று அந்தப் பகுதியைச் சேர்ந்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.