On May 14th decision to siege all district collector offices
விழுப்புரம்
இயற்கை வளங்களை அழித்து தமிழகத்தை பாலைவனமாக்க திட்டமிட்டுள்ள மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து வருகிற மே 14-ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பும் முற்றுகைப் போராட்டம் நடத்துவது என்று அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநிலக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் தமிழ்நாடு மாநிலக் குழுக் கூட்டம் விழுப்புரத்தில் சனிக்கிழமை தொடங்கியது. இதற்கு மாவட்டச் செயலாளர் ஏ.ஆர்.ஆனந்தராஜ் தலைமை வகித்தார்.
அகில இந்திய பொதுச் செயலாளர் இரா.திருமலை, மாநிலச் செயலர் வ.பாலமுருகன், மாநிலத் தலைவர் பெ.முருகேசு ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் மாவட்டச் செயலர் ஏ.வி.சரவணன், மாவட்ட நிர்வாகிகள் அஞ்சாமணி, ஏ.செந்தில், தேவேந்திரன் வாழ்த்திப் பேசினர்.
இந்த மாநிலக் குழுவில், "உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும்,
எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமைச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மாற்றி அமைக்க வேண்டும்,
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கல்லூரி மாணவிகளை தவறான வழிகாட்டுதலுக்கு உள்படுத்த முயன்ற பேராசிரியை நிர்மலாதேவியிடம் உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் முன்னிலையில் விசாரணை நடத்தி உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து தண்டிக்க வேண்டும்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளைப் போல அரசு நிதி உதவிப் பள்ளிகள், சுயநிதிப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் பாகுபாடின்றி இலவச மடிக்கணினியை வழங்க வேண்டும்,
கல்விக் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும்
காவிரி நீர் வழங்காமலும், ஆற்று மணல் கடத்தலை தடுக்காமலும் நியுட்ரினோ, ஸ்டெர்லைட், ஐட்ரோ கார்பன் போன்ற மக்கள் பாதிப்புத் திட்டங்கள் மூலம் தமிழகத்தை பாலைவனமாக்க மேற்கொண்டு வரும் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் மே 14-ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பும் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடுவது" என்று இந்தக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
