Omicron: டெல்டா வகை கொரோனா தான் வந்திருக்கு..ஒமைக்ரான் இன்னும் வரலை - சுகாதாரத்துறை
சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்தவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வந்தவர்களில் மொத்தம் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்தவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 61 வயது முதியவரான இவர், திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுவரை திருச்சியில் 2 விமான பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது. இதனையடுத்து வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வந்தவர்களில் மொத்தம் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதில் 6 பேரின் மாதிரிகளில் நடத்திய பரிசோதனையில் அவர்களுக்கு டெல்டா வகை கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் அதில் இரண்டு பேர் நாகர்கோவில் மருத்துவமனையிலும், 4 பேர் கிங்ஸ் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளனர். மேலும் தமிழகத்தில் 80.44% முதல் தவணையும், 47.46% 2வது தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. வழக்கம் போல் சனிக்கிழமை 14வது மெகா தடுப்பூசி முகாம் 50,000 இடங்களில் நடைபெறும் என சுகாதார துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.
கொரோனா உருமாற்றத்தின் ஒன்றான ஒமிக்ரான் 38 நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. ஆபத்து அதிகம் உள்ள 12 நாடுகளில் இருந்து விமானம் மூலம் வருபவர்களும், மற்ற நாடுகளில் இருந்து வருபவர்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். தமிழகத்தில் இதுவரை ஆபத்து அதிகம் உள்ள நாடுகளில் இருந்து 28 விமானங்கள் நாள்தோறும் வருகின்றன. மற்ற நாடுகளில் இருந்து வரும் விமானங்களை சேர்த்து மொத்தம் 170 வெளிநாடு விமான போக்குவரத்து நாள்தோறும் உள்ளது. ஆபத்து அதிகம் உள்ள நாடுகளில் இருந்து வருவோரில் இதுவரை 5,249 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.