நீதிமன்றத்தின் முன் முதியவர் தீக்குளிக்க முயற்சி..! அதிர்ச்சி சம்பவம்..! என்ன காரணம் தெரியுமா?
நில அபகரிப்பு வழக்கில் 10 ஆண்டுகளாக தீர்ப்பு வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவதால் முதியவர் ஒருவர் விருதுநகரில் தற்கொலை முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் வச்சக்காரப்பட்டியைச் சேர்ந்த 65 வயதான ஆறுமுகம் என்ற முதியவருக்கு 3 ஏக்கர் நிலம் இருந்துள்ளது. பணம் எதுவும் தராமல், அந்த நிலத்தை பெரிய நிறுவனம் ஒன்று எடுத்துக்கொண்டது.
ஆனால், அந்த நிறுவனம் பணம் தராததால் விருதுநகர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் ஆறுமுகம் வழக்கு தொடர்ந்தார். வழக்கின் விசாரணை கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது. ஆனால் இதுவரை பணமும் கிடைக்கவில்லை. வழக்கும் முடிந்தபாடில்லை.
வழக்கின் விசாரணைக்கு முதியவர் பணம் செலவழித்ததுதான் மிச்சம். இந்த நிலையில், என்ன செய்வதென்று புரியாமல், தனது வலியை எவ்வாறு நீதிமன்றத்துக்கு புரியவைப்பது என்பது தெரியாமல் வேதனைப்பட்டுக் கொண்டிருந்த ஆறுமுகம், திடீரென அதிரடி முடிவு ஒன்றை எடுத்து அதை செயல்படுத்தி அதிகார வர்க்கத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார்.
விருதுநகர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்துக்கு முன்பாக மண்ணெண்ணெயை தன் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தார். அதற்குள், போலீசார் தடுத்து நிறுத்தி சூலக்கரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
அண்மையில் கந்துவட்டி கொடுமை காரணமாக நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இசக்கிமுத்து என்பவர், குடும்பத்துடன் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவத்தின் தடம் மறையாத நிலையில், தற்போது முதியவர் ஒருவர், வழக்கு நிலுவையால் நீதிமன்றம் முன்பாக தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.