ரூ.1 கோடி மதிப்புள்ள செல்லாத நோட்டுக்கள் பறிமுதல் - மூவர் கைது!!
திருப்பூர் மாவட்டம் சோழிபாளையம் பகுதியில் சந்தேகத்துக்கு உரிய வகையில் சொகுசு காரில் சுற்றித் திரிந்த நபர்களை பிடித்து காவல்துறையினர் சோதனை செய்ததில், அவர்களிடம் இருந்து 1 கோடி ரூபாய் அளவுக்கு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை கைப்பற்றினர்.
திருப்பூரில், சந்தேகத்துக்குரிய வகையில் சொகுசு காரில் சுற்றித் திரிந்த நபர்களை பிடித்து விசாரித்ததில் அவர்களிடம் இருந்து பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டன.
திருப்பூர் மாவட்டம், சோழிப்பாளையம் பகுதியில் சுலைமான், ராமசாமி, செல்வக்குமார் ஆகியோர், நேற்று மாலையில் இருந்து சொகுசு காரில் சுற்றிக் கொண்டு இருந்துள்ளனர்.
இவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அப்பகுதியைச் சேர்ந்த சிலர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சந்தேகத்துக்குரிய அந்த மூன்று நபர்களையும் மடக்கிப் பிடித்து விசாரணை செய்தனர்.
அதில் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அவர்கள் தெரிவித்தனர். இதில் மேலும் சந்தேகமடைந்த போலீசார், அவர்கள் வந்த காரை சோதனையிட்டனர்.
சோதனையில், காரின் பின் பக்கத்தில் 1 கோடி ரூபாய் மதிப்பிலான பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததைப் போலீசார் கண்டு பிடித்தனர்.
இதையடுத்து, முகமது சுலைமான், ராமசாமி, செல்வக்குமாரை கைது செய்த போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போது, திருப்பூரில் உள்ள ஒரு தரகரிடம் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக, கோவில்மணி என்பவர் தங்களை புதுக்கோட்டையில் இருந்து அழைத்து வந்ததாகவும், பணம் மாற்றித் தரும் தரகரை அழைத்து வருவதாக கூறிச் சென்றதாக அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.
பல மணி நேரங்கள் ஆன பின்பும், கோவில்மணி திரும்பி வராததால், என்ன செய்வதென்று தெரியாமல் சோழிபாளையத்திலேயே சுற்றிக் கொண்டு இருந்தாகவும் கூறினர்.
இதையடுத்து, கோவில்மணி மற்றும் பணம் மாற்றித் தரும் தரகரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.