"வங்கி வாசலில் கிழித்து வீசப்பட்ட ரூபாய் நோட்டுகள்" - சேலத்தில் பரபரப்பு!!!
கடந்த நவம்பர் 8ம் தேதி பிரதமர் மோடி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இதையடுத்து, புதிய 2000 மற்றும் 500 ரூபாய் வெளியிடப்பட்டது. கையில் உள்ள பணத்தை மாற்ற முடியாமல் மக்கள் கடும் அவதியடைந்தனர்.
வங்கிகளில் குறிப்பிட்ட பணம் மட்டுமே பரிமாற்றம் செய்ய முடியும் என அரசு அறிவித்தது. இதனால், கடும் சிரமம் அடைந்த மக்கள், பெட்ரோல் பங்க் உள்ளிட்ட இடங்களில் பணத்தை மாற்றி கொண்டனர்.
ஆனால், கருப்பு பணம் வைத்திருந்த பலர், அதனை மாற்ற முடியாமல் தவித்தனர். இதையடுத்து, கையில் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை துண்டு துண்டாக கிழித்து குப்பையில் வீசினர். இதனால், பெரும் பரபரப்பு நிலவியது.
இதையொட்டி, சென்னை மடிப்பாக்கம் மற்றும் தாம்பரம் ஆகிய பகுதிகளில் உள்ள குப்பை குடோன்களில் ஏராளமான கிழிந்த நோட்டுகளை சாக்கு பைகளில் அடைத்து சிலர் வீசி சென்றனர். இதனால், மேலும் பரபரப்பு அதிகரித்தது.
இந்நிலையில், சேலம் மாவட்டம் ஆத்தூரில் அமைந்துள்ள, சேலம் மத்திய மாவட்ட கூட்டுறவு வங்கி கிளையின் வாசலில் துண்டு துண்டாக கிழிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் இன்று காலையில் கிடந்தன. அனைத்து பழைய ரூ.500 மற்றம் 1000 ரூபாய் நோட்டுகள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குவியல் குவியலாகவும், சிதறிய நிலையிலும் கிடந்த ரூபாய் நோட்டுகள் சுமார் 5 கிலோ இருந்ததாக கூறப்படுகிறது. இதன் மதிப்பு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.
கூட்டுறவு வங்கி கிளையின் அருகிலேயே எஸ்பிஐ வங்கி கிளையும் அமைந்துள்ளது. இதனால், இந்த கிழிக்கப்பட்ட நோட்டுகள் எந்த வங்கியில் இருந்து வீசப்பட்டது என விசாரிக்கப்படுகிறது. இதனை யார் வீசியது எனவும் தீவிரமாக விசாரிக்கின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.