செல்லாத நோட்டுக்கள் வைத்திருந்த இருவர் கைது - கோயம்பேட்டில் கட்டுகட்டாக சிக்கிய ரூ.90 லட்சம்..
கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் வைத்திருந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.90 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.
சென்னையில் இருந்து கோவை செல்ல இருந்த ஆம்னி பேருந்தில் சிலர் பழைய ரூபாய் நோட்டுகளை கொண்டு செல்ல உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் குறிப்பிட்ட அந்த பேருந்தில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கோவையை சேர்ந்த முகமது ரிஷாத் ,முகமது சுபேர் ஆகியோர் ரூ.90 லட்சம் மதிப்புள்ள பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் வைத்திருந்தது தெரிய வந்தது.
பின்னர், போலீசார் அவர்கள் இரண்டு பேரையும் கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் , கோவையை சேர்ந்த அமீர் என்ற தொழிலதிபர் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு சென்னை அனுப்பி வைத்ததும், பாரிமுனை அருகே அமீர் அளித்த முகவரியில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் கோவை திரும்பியதும் தெரியவந்தது.