Officers came to remove fish shops which is being many years
திருப்பூர்
திருப்பூரில் பல வருடங்களாக இருக்கும் மீன்கடைகளை அகற்ற வந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடை உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிகாரிகள் திரும்பி சென்றனர்.
திருப்பூர் மாவட்டம், அவினாசி சாலை பெரியார்காலனி பகுதி சாலை ஒரத்தில் இருபதுக்கும் மேற்பட்ட மீன்கடைகள் செயல்பட்டு வந்தன. இங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே கூட்டம் அதிகமாக இருக்கும். இதனால் மீன் வாங்க வருபவர்கள் சாலையோரத்திலேயே இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வர்.
இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது என்று கூறி அப்பகுதியை சேர்ந்தவர்கள் இந்த மீன்கடைகள் நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்துள்ளன என்றும் அந்த கடைகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள மீன்கடைகளை அகற்றுமாறு நெடுஞ்சாலைத்துறைக்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில், நேற்று மாலை திடீரென நெடுஞ்சாலைத்துறையின் கோவை கோட்ட பொறியாளர் செல்வக்குமார் தலைமையில் அதிகாரிகள் பெரியார் காலனியில் மீன்கடைகள் இருந்த பகுதிக்கு பொக்லைன் இயந்திரத்துடன் வந்தனர்.
அதன்பின்னர் அவர்கள், மீன்கடை உரிமையாளர்களிடம் நீதிமன்ற உத்தரவை காட்டி உடனடியாக கடைகளை அகற்றுங்கள் என்றனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர்கள், "முன்னறிவிப்புமின்றி கடைகளை அகற்ற சொன்னால் நாங்கள் எங்கு செல்வோம்" என்று கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கடை உரிமையாளர்கள், “கடந்த பல ஆண்டுகளாக இதே பகுதியில் வியாபாரம் செய்து வருகிறோம். இங்குள்ள 20-க்கும் மேற்பட்ட கடைகளில் 100-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். உடனடியாக அகற்றினால் 100 பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். மேலும் பல ஆயிரம் கொடுத்து நாங்கள் விற்பனைக்காக வாங்கி வைத்துள்ள மீன் உள்ளிட்ட உணவு பொருட்களை என்ன செய்வது?" என்று கூறி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
"நீதிமன்ற உத்தரவாக இருந்தாலும் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்றால் நாங்கள் எங்கு செல்வோம். எனவே, எங்களுக்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும்" என்றும், "இந்த இடத்தை காலி செய்யும் எங்களுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் மாற்று இடத்தை ஏற்பாடு செய்து தரவேண்டும்“ என்றும் கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், "வருகிற 2-ஆம் தேதிக்குள் கடைகளை அகற்ற கால அவகாசம் வழங்குகிறோம்" என்று தெரிவித்துவிட்டு அதிகாரிகள் திரும்பி சென்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த அனுப்பர்பாளையம் காவலாளர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பல வருடங்களாக மீன் வியாபாரம் செய்யும் இடத்தில் இருந்து மீன் கடைகளை திடிரென அகற்ற சொன்னதால் இங்கு பதட்டம் நிலவியது.
