லட்சத்தீவுகளில் கோர தாண்டவம் ஆடிய ஒகி புயல் !! 500 கோடி ரூபாய்க்கு மேல் பலத்த சேதம் !!!
தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கேரளாவை பதம் பார்த்த ஒகி புயல், லட்சத் தீவுகளில் ஆடிய கோர தாண்டவத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 500 ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 1 ஆம் தேதி கன்னியாகுமரி அருகே வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஒகி புயலாக மாறியது. இந்தப் புயலால் கன்னியாகுமரி மாவட்டம் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
ஆயிரக்கணக்கான மரங்கள் சாய்ந்தன… 2000க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் விழுந்ததால் அம்மாவட்டம் முழுவதும் இருளில் மூழ்கிக்கிடக்கிறது. இதே போன்று கேளராவிலும் ஒகி புயலால்பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து ஒகி புயலை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வலியுறுத்தினார். ஆனால் மத்திய அரசு இதற்கு மறுத்துவிட்டது.
இந்நிலையில் குமரி மாவட்டம் மற்றும் கேரளாவை பதம் பார்த்த ஒகி புயல் மேலும் மேற்கு நோக்கி நகர்ந்து லட்சத் தீவுகளை தாக்கியது. இதனால் அந்தத் தீவு கடும் பாதிப்புக்குள்ளாகியது. இது தொடர்பாக செய்தியாள்களிடம் பேசிய லட்சத்தீவுகள் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் முகமது , லட்சத்தீவுகளில் மினிகாய், கல்பேனி, கவரட்டி தீவுகள் ஒகி புயலால் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளதாக கூறினார்.
இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. 500–க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளன. தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. மின்கம்பங்கள், தொலைபேசி கம்பங்கள் விழுந்துள்ளன. கவரட்டியில் கடல் தண்ணீரை குடிநீராக்கும் ஆலை பாதித்துள்ளது. மொத்தத்தில் ரூ.500 கோடிக்கு மேல் சேதம் ஏற்பட்டுள்ளது. இங்கு இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கு மத்திய அரசு உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
விவசாயிகளுக்கு மழையாலும், சூறாவளி காற்றாலும் பெருத்த பயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் 10க்கும் மேற்பட்ட படகுகள் நீரில் மூழ்கிவிட்டதால் , படகு போக்குவரத்து முடங்கிப்போய் உள்ளதாகவும் முகமது கூறினார்.