இனி செல்போன் மூலம் சாதாரண இரயில் டிக்கெட் பெறலாம்; சீசன் மற்றும் பிளாட்பார டிக்கெடும் கிடைக்கும்;
மதுரை
மதுரை, தூத்துக்குடி உள்பட 14 இரயில் நிலையங்களில் செல்போன் மூலம் நேரடியாக ஆன்லைன் முறையில் இரயில் பயணிகள் சாதாரண டிக்கெட், சீசன் டிக்கெட், பிளாட்பார டிக்கெட் பெறலாம். இந்த முறை வருகிற 14-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்திய இரயில்வேயில் முன்பதிவு இல்லாத சாதாரண டிக்கெட்டுகளை செல்போன் மூலம் எடுக்கும் வசதி கடந்த 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்காக யூ.டி.எஸ். என்ற செயலி வடிவமைக்கப்பட்டது. இந்த செயலி ஆண்ட்ராய்டு, ஐ.போன் உள்ளிட்ட செல்போன்களில் இயங்கும்.
தென்னக இரயில்வேயில் சென்னையில் மட்டும் புறநகர் மின்சார இரயில்களுக்கான டிக்கெட் இந்த செயலி மூலம் எடுக்கும்படி வடிவமைக்கப்பட்டது. இது நாள்தோறும் மின்சார இரயில்களில் சென்றுவரும் பயணிகளுக்கு பயன் தருவதாக இருந்தது.
எனவே, இந்தத் திட்டத்தை தென்னக இரயில்வே முழுவதும் விரிவுபடுத்தும்படி பயணிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து சேலம் இரயில்வே கோட்டத்தில் பாசஞ்சர் இரயில்களில் செல்போன் மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி கொண்டுவரப்பட்டது.
அதன்பின்னர், மதுரை உள்ளிட்ட தென்னக இரயில்வே உள்பட பாலக்காடு, திருச்சி, திருவனந்தபுரம் இரயில்வே கோட்டங்களிலும் செயல்பாட்டுக்கு வந்தது. ஆனால், சென்னையை தவிர, பிற இரயில்வே கோட்டங்களில் செல்போன் செயலியில் டிக்கெட் எடுக்கும்போது, எஸ்.எம்.எஸ். மூலம் குறியீடு அனுப்பப்படும்.
அந்த குறியீட்டை இரயில் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரத்தில் உள்ளடு செய்ய வேண்டும். தானியங்கி எந்திரம் மூலம் பயணிக்கு டிக்கெட் வழங்கப்படும்.
இந்த நிலையில், மதுரை கோட்டத்தில் மதுரை, தூத்துக்குடி உள்பட 14 இரயில் நிலையங்களில் செல்போன் மூலம் நேரடியாக ஆன்லைன் டிக்கெட் பெறும் முறை வருகிற 14-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இதன்மூலம் பயணிகள் செல்போன் மூலம் சாதாரண டிக்கெட், சீசன் டிக்கெட், பிளாட்பார டிக்கெட் ஆகியவற்றை எடுக்கலாம்.
இதுகுறித்த தொழில்நுட்ப ஆலோசனையில் வர்த்தக பிரிவு அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
தென்னக இரயில்வேயில் யூ.டி.எஸ். செயலி மூலம் கடந்த 2016-17-ஆம் நிதியாண்டில் 33 கோடியே 98 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளது. இதில் ரூ.404 கோடியே 45 இலட்சம் வருமானமாக கிடைத்துள்ளது.
2017-18-ஆம் நிதியாண்டில் 34 கோடியே 39 இலட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகி ரூ.408 கோடியே 55 இலட்சம் வருமானமாக கிடைத்துள்ளது. சென்னை கோட்டத்தில் மட்டும் கடந்த ஜனவரி மாதம் வரை 10 இலட்சத்து 31 ஆயிரம் பயணிகள் இந்த செயலி மூலம் டிக்கெட் எடுத்துள்ளனர்.