Asianet News TamilAsianet News Tamil

பரபரப்பு: 20 ஆண்டுகளாக காத்திருந்தும் வேலை கிடைக்காததால் மாற்றுத்திறனாளி தற்கொலை முயற்சி...

not getting job for 20 years waiting physically challenged person suicide attempt
not getting job for 20 years waiting physically challenged person suicide attempt
Author
First Published Jun 13, 2018, 8:33 AM IST


 
விருதுநகர்

20 ஆண்டுகளாக அரசு வேலைக்காக காத்திருந்தும் வேலை கிடைக்காததால் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்று ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி முயற்சித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள ரெங்கப்பநாயக்கன் பட்டியைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி (31). இவரது மனைவி பார்வதி (27). மாற்றுத் திறனாளிகளான இவர்களுக்கு ஷியாமளா (4) என்ற பெண் குழந்தையும், 1½ வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். 

சின்னத்தம்பி கடந்த 2014–ஆம் ஆண்டு முதல் அரசு உதவித்தொகை பெற்று வருகிறார். இவர் தனக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து கடந்த 1998–ஆம் ஆண்டு முதல் மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்து வருகிறார். 

ஆனால், இதுவரை அரசு வேலை கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று தனது இரண்டு குழந்தைகளுடன் விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் வந்த அவர், "தனக்கு அரசு வேலை கிடைக்காததால் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்" என்று அங்கிருந்தவர்களிடம் தெரிவித்துள்ளார். 

அவர்கள் இதுபற்றி காவலாளர்களுக்கு தெரிவிக்கவே காவலாளர்கள் சின்னத்தம்பியையும் அவரது குழந்தைகளையும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். 

அங்கு அவரிடம் அதிகாரிகள் அவரது கோரிக்கைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறி சின்னத்தம்பியையும் சமாதானப்படுத்தினர். பின்னர், அவரை அவரையும் அவரது குழந்தைகளையும் பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios